02 உலகம்

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் வெளியான ஒரு பழைய கவிதை இது. மாநில அடையாளக் கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி மலருக்குத் தேர்வாகி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். அட நம்ம கவிதையைக்கூட கண்டுகொள்கிறார்களா என்று. இருந்தும் ஒரு கவிதை நூல் வெளியிடும் மனவீரம் அன்று எனக்கு வரவே இல்லை. கனடா வந்துதான் என் பழைய கவிதைகளைக் கோத்து முதல் நூல் மாலை செய்தேன்.


சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து

- அன்புடன் புகாரி

No comments: