வேண்டுதல் வேண்டுமா?

தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவனே.

ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான்.

வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது.

நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல்

இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர்.

இந்த ஆற்றைக் கடக்க இறைவா எனக்கு அருள்செய் என்று கூறிக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர்.

இந்த இருவருமே தன் தேவையைத் தன்னிடமே உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆற்றைக் கடப்பது சிரமங்கள் மிகுந்தது. ஆனால் அதை நான் எப்படியும் கடந்துவிடுவேன் என்பதும் நம்பிக்கை...

ஆற்றைக் கடப்பது சிரமம் மிகுந்தது இறைவன் துணையால் நான் எப்படியும் கடந்துவிடுவேன் என்பதும் நம்பிக்கை...

இரண்டுமே நம்பிக்கைகள்தாம் என்றாலும் காரியம் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் வெறும் நம்பிக்கையில் மட்டுமல்ல அயரா உழைப்பிலும் விடாமுயற்சியிலும் இருக்கிறது

இறைவனிடம் வேண்டிக்கொண்டவன் தான் முயன்றால்தான் இறைவன் கைதருவான் என்று நம்பினால்தான் வெல்வான் இல்லையேல் இறைவன் கைவிட்டுவிட்டான் என்று இறைவனைச் சபிக்கத் தொடங்கிவிடுவான்.

அவன் உண்மையில் சபிப்பது இறைவனையா அல்லது அவனையேவா?

இறைவனிடம் வேண்டாமல் தன் சக்தியை நம்பி ஆற்றைக் கடக்கத் திட்டமிட்டவன் தன்மீது அபார நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டால் அவனும் வெற்றியடைய முடியாது.

அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கும் முட்டாளைவிட தன் முயற்சியால் வெல்வேன் என்று இறுதிவரை உயிர் வதைத்துப் போராடுபவனின் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம்.

அவனையே இறைவன் காப்பாற்றுகிறான் என்று இறை நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம், தன் மீதுள்ள நம்பிக்கை எந்த ஒரு சமயத்திலும் தனக்குக் குறையும் வாய்ப்பினைப் பெற்றால் அவனைச் சுற்றியர்வகளின் உந்துதலைப் பெறவேண்டும்.

அதோடு அனவது சுயவலியும் வைராக்கியமும் மூர்க்கம் தர வேண்டும் அப்போதுதான் வெற்றி விருந்தாகும்.

இறைவனை நம்புகின்றவர்களுக்கு, எத்தனை தோல்வி வந்தாலும் இறைவன் துணை இருக்கிறான் என்ற ஒரு அழுத்தமான நம்பிக்கை இருக்கும். அது அவனைச் சோரவே விடாது.

ஆக, இறைவனின் நம்பிக்கையும் இருந்து சுயத்தின் விடா முயற்சியும் இருந்தால் அவனது வெற்றியை எவராலும் மாற்ற முடியவே முடியாது.

எப்படியாயினும் வேண்டுதல் வேண்டுமென்றுதான் ஆகிறது. எவனொருவன் எதைத் தன் உயிர் பிளந்து அதன் உள்ளே விதைக்கிறானோ அதை அவன் அடைந்தே தீருவான்.

அத்தனை சக்தி வலிமையான எண்ணங்களுக்கு இருக்கின்றன.

எண்ணமே எவருக்கும் எல்லாமுமாய் இருக்கிறது.

ஒரு எண்ணம் நிறைவேற அழுத்தமான நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை எந்த வழி வந்தாலும் வெற்றி என்பது உறுதிதான். ஆகவே, வேண்டுதல் வேண்டும்தான்

1 comment:

அன்புடன் அருணா said...

//சுயவலியும் வைராக்கியமும் மூர்க்கம் தர வேண்டும் அப்போதுதான் வெற்றி விருந்தாகும்.//
நிஜம்....அழகான பதிவு..பிடியுங்க.....பூங்கொத்து....