அன்பின் தரிசனம்

அன்பு வேண்டுமென்று
ஆண்டவனிடம் கேட்டேன்
காத்திருந்தேன்
ஆண்டவன் வேண்டுமென்று
அன்பிடம் கேட்டேன்
தரிசிக்கிறேன்
80

ஒரு குண்டு மல்லியை
அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி
என் சட்டைப்பைக்குள்
கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு
நடந்த நாட்கள்

விரல்கள் பூ மல்லியில்
விழிகள் வானமல்லியில்

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து
வருடிக்கொண்டே
என் வாலிப வாழ்க்கை
கனவுகளுடன் மிதக்கும்
என்றேன்

இன்றுமுதல்
நிலாவை நான் வெறுக்கிறேன்
என்றாள் அமைதியாக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
79

நானொரு ரகசியம்
சொல்லட்டுமா என்றேன்
என் ரகசியம்
என்னை நச்சரிக்க

சொல் சொல் என்றாள்
கண்களில் தீபம்
அசைய

வேண்டாம் இப்போது
பிறகு சொல்கிறேன் என்றேன்
தயக்கம் என்னைத்
தயங்காமல்
உறிஞ்சியதுபோக
மிஞ்சிய நெஞ்சால்

பிறகு எப்போது?

விட்டேனா பார் என்று
பார்வையாலேயே
ராஜ தூண்டில் சுழற்றினாள்

நீ சொல்லப் போவது என்னவென்று
எனக்குத் தெரியும் தெரியும்
அதைச் சொல்லித்தொலையேன்
சீக்கிரம் சீக்கிரம்
என்ற தவிப்பான தவிப்பு
தவித்துக்கொண்டிருந்தது
அவள் மாபெரும்
மைவிழிகளில்

பயம் தந்த தைரியத்தில்
பவ்வியமாய் விலகினேன்
பிறகு எப்போது என்று
பிறகு சொல்கிறேன் என்று
பிதற்றிக்கொண்டே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
78

சொர்க்கங்கள் எனக்கு
இரண்டு

ஒன்று
உன் இடது விழி
இரண்டாவது
உன் வலது விழி

கொஞ்சம்
விடுமுறை கொடுக்கலாமா
உன் சொர்க்கங்களுக்கு
என்றேன்
உள்ளே பதுக்கிவைத்த
உணர்வுகள்
உற்சாகத் தோகைவிரிக்க

அவ்வப்போது
இமைகளைப் படபடக்கச்செய்து
விடுமுறை
கொடுக்கத்தானே செய்கிறாள்
போதாதா என்றாள்
பாசாங்குக்காரி

போதாது போதாது
அவற்றுக்கு
ஓர் அவசர விடுமுறை
கொடுக்கவேண்டும் இப்போதே
என்றேன்
நெற்றிப் பொட்டில்
கெட்டிமேளம் கொட்ட

கவலையில்லை
அது எனக்குப்
பிடித்த விளையாட்டுத்தான்
என்றாள்
கழுத்துக் கரைகளில்
சிலிர்ப்பு நதி சீறிப்பாய

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
77

இழுந்து அணைத்து
கழுத்த்த்த்துக்குள்
புதைந்தால்

இமைக் கதவுகளைச் சாத்திக்கொண்டு
விழிச் சொர்க்கங்களுக்கு
விடுமுறை கொடுத்துவிடுவாள்
என் யாழிசை

இதழ்கள் கவ்வி
உயிர் உறிஞ்சினால்
இன்னுமின்னும் இறுக்கமாய்த்
தன் விழிச் சொர்க்கங்களைப் பூட்டிச்
சாவியைத் தூர எறிந்தேவிடுவாள்

இதற்குமேல் எழுதி
அவளைப் பாடாய்ப்படுத்த
நான் தயாராய் இல்லை.

காதல் தவிப்பே என்றாலும்
என் கண்மணி துடிப்பதை
என்னால் ஏற்க முடிவதில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
76

என் விரல்களை
உன் விரல்களில்
கோத்துப் பார்த்தேன்

யாழிசை மொழி பொழியும்
என் தேவதையே

அந்த அழகை நான்
சொல்லவும் வேண்டுமா

அசந்துதான் போனேன்
உயிர் துடித்து
உடல் நிறுத்திக் கிடக்கும்
சிலையாக

நான் மட்டுமா
என் செல்லமே
நீயும்தான்

அப்படியே ஓர் புகைபடம்
எடுத்து பத்திரப் படுத்திக்கொள்வோமா
என்று நம் ஆசைகள்
நம்மை அவசரப்படுத்தின

ஆனால் என் இதயமோ
வேண்டாமடா வேண்டாம்
வெறும் புகைப்படம் வேண்டாம்
இந்த விரல்களை
உனக்கே உனக்கானதாய் ஆக்கு
என்று கெஞ்சிக் கூத்தாடியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
**** 75

என் உயிரின்
அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும்
என் உயிரே

என்னை நிராகரிப்பது
உன் உரிமை
எப்படி வேண்டுமானாலும்
என்னை
நிராகரித்துக்கொள்
ஆனால்
என் கண்கள் தொடும்
தொலைவிலேயே
இரு

உன் மீதான
என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது

எனக்குள்
அதை ஊட்டிவிட்டவள்
நீதான்

நெஞ்சில்
எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய்
உதடுகளால் நடிக்கிறாய்

ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்ப மாட்டேன்

நீ வாழவே
நான் வாழ்வேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
****74

நீ
என்னைக்
கோவிலுக்கு
அழைத்துச் சென்றாய்

தெய்வத்தின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
கோவிலுக்குச் சென்ற
ஒரே பக்தன்
நானாகத்தான் இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
73

வளர
வளரத்தான் நிலவு
பழக
பழகத்தான் அழகு

பார்த்த
மாத்திரத்திலேயே
நீ மட்டும் எப்படி
பேரழகு

உன்னை
முதன் முதலில்
முகர்ந்தபோதுதான்
என் மூக்கு
மூச்சுவிடத் தொடங்கியது

நான்
மூழ்கக் காத்திருக்கும்
படகு

உன்னிடம்
கவிழ்ந்த பின்தான்
என் பயணமே தொடங்கியது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****Top
72

இனி
ஒருபோதும்
கடற்கரைக்கு வராதே

எத்தனை பெரிய
கடல் அது

நீ
எழுந்துபோனபின்னும்
பேரலைகளாய்த்
தாவித் தாவித்
தவிக்கிறது பார்
பாவம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
71

உன்
கண்களில்
மையாகவாவது
என்னை
இட்டுக்கொள்

என்
உனக்காக
கன்னங்கரேல்
என்றாக
எனக்குச் சம்மதம்

உன்
நாவினில்
எச்சிலாகவாவது
என்னை
வைத்துக்கொள்

என்
உனக்காக
நிறமற்றுப் போகவும்
எனக்குச் சம்மதம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்