05 நீதான்... உன் இறைவனைத்தான்....

உன்னை அழிக்காதே
ஊரை அழிக்காதே
உலகை அழிக்காதே
என்றால் கேட்பாயா?

உன்னை உயர்த்து
ஊரை உயர்த்து
உலகை உயர்த்து
என்றால் ஏற்பாயா?

நீ கேட்பாய்
ஆனால் கேட்க மாட்டாய்

நீ ஏற்பாய்
ஆனால் ஏற்க மாட்டாய்

உன்னைக்
கேட்கவே கேட்க வைக்கவும்
ஏற்கவே ஏற்க வைக்கவும்
வந்த மார்க்கம்தான்
இஸ்லாம்

இஸ்லாம் மட்டுமா
உலகின்
அத்தனை மதங்களுமே
அதையே சொல்ல வந்தன

ஆனால் இஸ்லாம்
ஒருபடி மேலே சென்று
ஒவ்வொன்றையும்
செம்மையாய்
வகுத்துக் கொடுத்துவிட்டது

இதுவேயன்றி வேறேதும்
சூட்சுமம் இல்லை
மதங்களிடம்

நீ
வெட்டுவதும்
ஊரைச் சாய்ப்பதும்
உலகை
மரணக்கிடங்காய்க் குவிப்பதும்

உனக்காக
உன் மதத்துக்காக
உன் இறைவனுக்காக
என்றால்

நீ
வெட்டிச் சாய்ப்பது
வேறு எதையுமே அல்ல

உன்
மதத்தைத்தான்

உன்
இறைவனைத்தான்