2 புறப்படு


புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக்
கடலையே சேர்கின்றன

முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்

சறுக்கில்லாக் கவனமும்
பூட்டில்லாச் செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்

கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்

திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி

4 comments:

N Suresh said...

நதியைப் பார்
விதியை பார்க்காதே
என்கிறது இந்த கவிதை
ஒவ்வொரு வரிகளிலும் அழகு
நான் ரசித்தேன், நன்றி

அன்புடன்
என் சுரேஷ்

சீனா said...

ஆம் அன்பின் புகாரி

புறப்பட வேண்டும் - வாழ்க்கைப்ப்யணம் புறப்பட வேண்டும்

முடிவினைப் பற்றிக் கவலைப்படாமல் புறப்பட வேண்டும்

திரும்பிப்பாராமலா - பார்க்கலாம் தவறில்லை

நல்ல கருத்து நண்ப

நட்புடன் ..... சீனா

பூங்குழலி said...

முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்

திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி

"நதி ஓடிக் கொண்டே இருக்கிறது ..ஒவ்வொரு துளியும் புதுத் துளியாக .."என்று ஒரு கதையில் படித்தேன் .அந்த வரிகளை நினைவுப் படுத்தியது கவிதை .அருமையாக இருக்கிறது

கிரிஜா மணாளன் said...

>> சறுக்கில்லாக் கவனமும்
> பூட்டில்லாச் செவியும் போதும்
> புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
> போகும் திசையைச்

> சொல்லிக்கொண்டே இருக்கும்

இக்கவனம் இயற்கை வளங்களுக்கு மட்டுமே வாய்த்தவை. மனிதனின்
ஓட்டமாயிருப்பின், அவனுக்கு வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளும்,
தடுமாற்றங்களும் அவனை திசைதிருப்பவோ, பயணத்தைத் தொடரமுடியாமல்
செய்துவிடவோ கூடும்.
உண்மைதானே?

- கி.ம.