18 செப்டம்பர் 11, 2001

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வானத்தை முத்தமிட்டுக்கொண்டு கம்பீரமாய் நின்றுகொண்டிருந்த இரட்டைக் கோபுரங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியில் இருந்த ஒரு செவ்வாயின் காலையில் தீவிரவாதிகளால் கொடூரமாய் தகர்க்கப் பட்ட செய்தியை செவ்வாய் உயிரினங்கள் கூட அறிந்திருக்கும்.

சுமார் 5000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற முதல் செய்தி நெஞ்சை நெருப்பு ரவைகளால் துளைத்தது. உயிர்களைச் சுமந்த உயிரற்ற விமானப் பறவைகளின் முதல் இடி நடந்ததுமே தொலைக்காட்சிகள் மூலம் முழு அவலத்தையும் காணநேர்ந்தது. அது ஏதோ ஒரு புதிய ஹாலிவுட் திரைப்படத்தின் விளம்பரக் காட்சிபோல் இருந்ததே தவிர உண்மையில் நிகழ்வதாய் நம்பமுடியவில்லை.

இன்றைய தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் ஒரு நாள் என்பது 48 மணிநேரம் என்று நம்பும்படியாய் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு என் இதயம் ஏற்படுத்திய துடிப்புகளை நான் வார்த்தைகளாய் மொழிபெயர்த்ததுதான் இந்தக் கவிதை.

இரட்டைக் குமரிகளாய்
வான் தொட்டு வளர்ந்து நின்ற
உலக வணிகக் கோபுரங்கள்
மூர்க்கர்களின் வெறியில்
இன்று சுடுகாட்டுச் சாம்பல்

அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பை
நடு ரோட்டில் வைத்துத்
துணிகரத் துகிலுரிப்பு

பறப்பதற்கு
பறவைகளுக்கும் பயம்

நேரம் தவறாமல்
வேலைக்கு வந்தவர்களுக்கு
மரணம் பரிசளிப்பு

தீவிரவாத அட்டூழியத்தின்
சரித்திரம் காணாத
புதிய சாதனை

நாடு-நிறம்-மதம்-ஜாதி என்று
வேறுபட்டப் பறவைகள்
கூடிப் பணிபுரிந்த
வணிக வேடந்தாங்கலில்
வக்கிர வல்லூறுகளின்
வஞ்சகச் சதி நெருப்பு

உலகப் பொருளாதாரத்தை
அடித்துத் துவைத்துக்
கிழித்துப்போட்ட அவலம்

உள்ளூர் வெளியூர்
வேலை வாய்ப்புகளுக்குக்
கட்டாய ஓய்வு

உலகமென்றால் அமெரிக்கா
அமெரிக்காவென்றால் உலகம்
என்றிருந்த
சராசரி அமெரிக்கர்களுக்கு
உலக வரைபடத்தின்
அறிமுகப் பாடம்

அடையாளம் தெரியாத
அரசியல் விளையாட்டுகளில்
இது என்ன விளையாட்டோ
என்ற பல கோணக் குழப்பம்

உலக அழிவிற்கு
தீவிரவாதமே காரணமாகிப்போகும்
என்று தீர்மானம்

மதத்தின் முகம்
விகாரமாய்ச் சிரிக்க
மனிதகுலம் செத்து மடிந்த உண்மை

No comments: