வாழ்க்கை நாடகசபா

ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

என்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்

பிறகு...
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த

நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது

என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது

இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி
எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும்
இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை
மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது
என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

4 comments:

N Suresh said...

இது விரக்தியின் வெளிப்பாடாகத் தெரிகிறது. சிவாஜி ஐயா, தனக்கு நடிக்கத் தெரியாது, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன் என்பார். பொய் எது உண்மை எது என்று ஓரளவு புரிந்து கொள்ளும் அறிவு இறைவன் நமக்கு தந்துள்ளார். ஏமாற்றம் அடைந்த ஒருவன் உலகத்தில் உள்ள எல்லோரும் கெட்டவர்கள் என்று சில காலமே சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் perception என்ற வார்த்தையின் அர்த்தம் படி நாம் பார்க்கின்ற பார்வையில் தான் ஒரு நிகழ்வின் வெளிப்பாடு நமக்கு உணரமுடிகிறது. ஹிட்லராகவும் மகாத்மாவாகவும் வாழ இறைவன் நமக்கு சுதந்திரம் தந்திருக்கிறார். இன்று பிரச்சனை சுதந்திரத்தை அவமதிப்பது தான். ஷேக்ஸ்பியர் சொன்னது போல், "உலகம் ஒரு நாடகமேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள்" என்ற அர்த்தத்தில் இந்த கவிதை பாராட்டு பெற்றாலும், கவிதை அமைப்பு அழகாக இருந்தாலும் ஒரு விரக்தியை தான் இந்த கவிதை தருகிறது. அது தன் இந்த கவிதையின் நோக்கமென்றால் இந்த கவிதை வெற்றியை தந்துள்ளது, வாழ்த்துக்கள்! என தந்தையின் மரணம் கண்டு குழந்தைபோல் அழுத அந்த நொடிகளை நினைத்த போது ஷேக்ஸ்பியரின் மேற்குறிப்பிட அந்த கருத்துக்கள் தவறு தானே என்கிறது எனது அறிவு.

அன்புடன்
என் சுரேஷ்

Unknown said...

உண்மைதான் சுரேஷ், ஒரு வகையில் இது விரக்திதான். ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு துகளிலும் உண்மை களவாடப்படுகிறதே என்ற வெறுப்பில் வரும் விரக்திதான்.

உலகமே ஒரு நாடகமேடை நாமெலலோரும் நடிகர்கள் என்று சேக்‌ஷ்பியர் ஒரு வரியில் சொன்னதை இப்படி நீட்டி முழக்கி எழுதவைத்தது அந்த வெறுப்பின் நீட்சிதான்.

அன்புடன் புகாரி

பூங்குழலி said...

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல
வாழ்வது எப்போது என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

பிறருக்கென நடித்து சுயம் மறந்து போகிறோம் ....

விஷ்ணு said...

ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

என்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்
முதலில் நடிப்பு என தெரியாமல் புதிராகத்தானே இருக்கும் ...


பிறகு...
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த
வேறு வழி இல்லையே ... அவசியமும் நேருமே ..


நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது
என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது
இயல்பாகவே நடிக்க கற்றுகொள்வோம்
இல்லை என்றால் கற்று தருவார்கள் ..


இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

அதை கண்டுபிடிப்பது மிக கடினமே ..


ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

உண்மை தான் .. சில நேரங்களில்
இப்படி வியப்பு எனக்கும் வருவதுண்டு ..


இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும் இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

சந்தர்பமும் .. சூழ்நிலையும் ..
நாடக மேடைகளை மாற்றிக்கொண்டே இருக்கும் ..
நடிகர்களும் மாறுவார்கள் ..


எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமைசாலிகள் வெற்றி பெறுகிறார்கள் ..
திட்டமிடலும் செயல் படுத்தலும் நொடிகளில்


திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

மிக சரியே ...

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

நிஜத்தை தொலைத்துவிட்டு
பொய்களை தேடும் வாழ்க்கை

அருமையான கவிதை .. அன்பின் புகாரி ...

அன்புடன்
விஷ்ணு ..