15 பெருமூச்சு

*பெருமூச்சு*

இதயக் கடலுக்குள்
வேதனைச் சுழலால்
வீரிட்டெழுந்து
எண்ணச் சோலையில்
ருத்ர தாண்டவமாடி
இறுதியில்
ஆர்ப்பாட்டமின்றி
வெளியேறும்
மனப் புயல்

*

நான் புதுக்கவிதை எழுதிப் பழகியது இப்படித்தான்.

என் சிறுவயது முதல் (ஏறத்தாழ 8 வயது) எதுகை மோனை பார்த்து பின் அசை பிரித்துச் சந்தக் கவிதைகள்தாம் எழுதிக்கொண்டிருந்தேன்.

ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்கு நான் தரும் எனக்கே எனக்கான விளக்கமாய் என் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். அப்படி நான் எழுதியவை பல.

எடுத்துக்கொண்ட தலைப்பில் சிந்தனை வயப்பட்டு ஆழ்ந்து அமர்ந்திருப்பேன். பொறி தட்டியதும் பொங்கி எழுந்து சட்டென எழுதிவிடுவேன்.

இரவில் வெகுதூரம் நடந்திருக்கிறேன். திரும்பும்போது கவிதையோடுதான் வருவேன். பகலில் ஏரிக்கரையோரம் மல்லாந்து படுத்துக்கிடப்பேன் அல்லது பாலத்தடியில் அமர்ந்திருப்பேன். எழும்போது பலநேரம் கவிதையோடுதான் எழுவேன்.

எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு இரவில் உறங்கச் செல்வேன். உறங்குவதற்கு முன் உறங்கவிடாமல் ஓர் எண்ணம் என்னை அலைக்கழிக்கும். எழுந்து எழுதாவிட்டால் அன்று இரவு முழுவதும் உறங்க வழியே இல்லை.

மேசையில் அமர்ந்து காகிதங்களோடு பலமணி நேரங்கள் அமர்ந்திருந்தாலும் கவிதை வராது. ஆனால் தலையில் நீர் தாலாட்ட வீட்டின் செயற்கை அருவியில் நீராடும்போது அப்படியே ஈரத்தோடு வெளியே ஓடிவந்து ஈரம் சொட்டச் சொட்ட காகிதங்களில் சில கவிதை வரிகளைப் பதிவு செய்வேன்.

சில கவிதைகள் இலையுதிர்கால மழையைப் போல் சட்டெனக் கொட்டக்கூடியவை. சில கவிதைகள் ஆளரவமில்லாத காட்டுக்குள் தனித்திருக்கும் ஓர் இளம் பெண்ணின் தலைப் பிள்ளைப் பேறினைப் போல வலி மிகுந்தவையாய் இருக்கும்.

எப்படியாகினும்
என் கவிதைகள்
என்பன
என்னை நான்
அவ்வப்போது
என்னையறியாமல்
என்னாளானவரை
உணர்வுக் கொதிப்போடு
இறக்கிவைக்கும்
’நான்’ கள்

அன்புடன் புகாரி

No comments: