வண்ணவிழிகளோ வலைத்தளங்கள்



இந்தக் கவிதையைப் பற்றி மாலன் :

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. இன்று நேற்று அல்ல, அநாதி காலம் தொட்டு இதுதான் கதை. காதல் கவிதை எழுதப்படாத மொழியே உலகில் இல்லை. கவிதையைப் பரிமாறிக் கொள்ளாத காதலர்களும் அபூர்வம்.

தமிழ் இதற்கு விதி விலக்கு அல்ல. முன்னோடி. உலகில் உள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் காதல் கவிதைகள் தோன்றிவிட்டன. மொழிக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன், கவிதைகளை அகம் புறம் எனத் திணைகள் வகுத்தான்.

எனவே தமிழில் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் முன் ஒரு சவால் இருக்கிறது. இங்கு காதலும் பழசு. கவிதையும் பழசு. ஆனால் எழுதப்படுகிற காதல் கவிதை மட்டும் புதுசாக இருக்க வேண்டும்!

ஆனால் இது சந்திக்க முடியாத சவால் அல்ல. பழைய மரம் தினம் புதிதாய்ப் பூப்பதைப் போல இங்கு காதல் கவிதை பூக்க வேண்டும். காதல் கவிதையை 'செய்ய' முயன்றால். பழைய வாசனை, பழைய சாயல், பழைய பாணி வந்து விடும்.

புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

நெடுக அளந்து கொண்டே போகிறீர்களே, அப்படி என்ன இந்தத் தொகுதியில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

இப்படி ஒரு வரியை இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழந்த பெருங்கவிஞர்கள் யாரும் எழுதியிருக்க முடியாது. இணைய உலகில் வாழ்கிற பேறு பெற்றவர்களுக்குத்தான் இந்த வரிகள் வாய்க்கும்.

இது ஏதோ தற்செயல் அல்ல. இன்னொரு மாதிரி பார்க்கிறீர்களா?

தடதடக்கும் தட்டச்சுப் பலகை - அதன்
தாளலயம் வெல்லுமிந்த உலகை

-மாலன்



வண்ணவிழிகளோ வலைத்தளங்கள்

சின்ன இதழ்களோ
மின் மடல்கள்
சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்
பெண்ணே உன்
புன்னகை
மென்கணிச் சாளரங்கள்
கண்டதும்
உன் மன இணையமே
என் தவங்கள்

2 comments:

cheena (சீனா) said...

நாம் எதில் அதிக ஈடுபாடு காட்டுகின்றோமோ அதுவாகவே காதலியை உருவகப்படுத்தி உவகை கொள்வது நன்று. வாழ்த்துகள்

Unknown said...

நன்றிகள் சீனா