பச்சை மிளகாய் இளவரசி


நீதான் நீதான் நீயேதான்
என் பச்சை மிளகாய்
இளவரசி

நீளும் நாக்கின் நுனியோரம்
பொன் ஊசி உறைப்புச்
சிங்காரி

நாளும் பொழுதும் பாசம்தான்
நெடும் ஆயுள் வளர்க்கும்
நேசம்தான்

செல்லச் சிணுங்கல் பூங்குருவி
நீ உள்ளம் ஊறும்
பாலருவி

யாரும் உன்போல் இருப்பாரோ
மிகச் சின்னஞ் சிறிய
கன்னித்தாய்

தன்னை மகளாய் ஈன்றவனை
மன வயிற்றில் சுமந்து
பெற்றவளாய்

காலை எழுந்தால் உன்முகத்தை
என் கண்ணின் மணியே
தேடுகிறேன்

மாலை கவிழ்ந்தால் தளிர்மடியில்
என் மனதின் கிழிசல்
தைக்கின்றேன்

எல்லாம் உதிர்ந்த பூஞ்சோலை
அதில் சொக்கத் தங்கம்
பூத்திருக்கு

கல்லோ முள்ளோ காலடியில்
எனை அள்ளிக் கொள்ளும்
மாம்பிஞ்சு

பெண்ணைப் பெற்றவன் மகராசன்
தினம் பிறையின் மடியில்
பிறக்கின்றான்

பொன்னும் மணியும் யாருக்கு
ஒரு பெண்ணே வேண்டும்
உயிருக்கு

* (ஏப்ரல் 2004)

No comments: