08 நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்


ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் என்று கூவி விற்பதைக் கண்டிருக்கிறோம். ஒரு கவிதை எப்படி ஈயம் பித்தளையாய் மாறிப்போகக்கூடும் என்பதற்கு இந்தக் கவிதை ஒரு சான்று. இதை எழுதிய போது என் கண்முன் நின்ற விதவையின் கண்ணீருக்கு அடர்த்தி மிக மிக அதிகமாக இருந்தது. அந்த விதவையைப் பார்த்துப் பார்த்து மனதில் கொண்ட வலிகளைக் காகிதத்தில் இறக்கிவைத்தேன். பலராலும் வெகுவாகப்பாராட்டப்பட்ட கவிதை.

ஆனால் இன்று விதவைகளின் நிலை அப்படியே மாறிவிட்டது. பெண்கள் இன்றெல்லாம் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். பெரியார் பாரதிதாசன் பாரதியார் போன்றேரெல்லாம் அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்கள். அதனால் இன்று இந்தக் கவிதையின் உயிர் பரிதாபத்துக்குரியதாய் ஆகிவிட்டது. விதவைகள் வாழவேண்டும் என்பதுதான் இந்தக் கவிதையை எழுதுவதற்கான நோக்கமாக இருந்தது. அதற்காக தன் உயிரையே இந்தக் கவிதை தந்திருக்கிறது என்று எண்ணும்போது, இந்தக் கவிதையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்தக் காலத்தில் இப்படி பெண்கள் விதவைகளாக துயரப்பட்டார்களாம் என்று கூற ஒரு சரித்திரச் சான்றாக இந்தக் கவிதை உயர்ந்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன்.



நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்

வெள்ளை வேலிக்குள்
வாழ்வை முடக்கிக் கொள்ள
சாபமிடப்பட்ட இவர்கள்
விதவைகள்.

இவர்களின் சாம்ராஜ்யத்தில்
ஏக்கங்களுக்குச் சிறைத்தண்டனை
ஆசைகளுக்கு ஆயுள் தண்டனை
உணர்வுகளுக்குத் தூக்குத்தண்டனை

இதய மேடையை
பலிபீடமாக்கிக் கொண்டவர்கள்

விதியின் பெயரைச் சொல்லி
இயற்கையைத் தூக்கிலிடும்
அநீதிபதிகள்

சமுதாயச் சர்வாதிகாரப்படி
இவர்களின் சிட்டுக்குருவிகள்
சிறகொடிந்தே கிடக்கவேண்டும்

பட்டமரமாவதற்குப்
பஞ்சாங்க மக்களால் சபிக்கப்பட்டவர்கள்

பாதி நாடகத்திலேயே பார்வை பறிக்கப்பட்ட
துர்பாக்கியவதிகள்

சமுதாயக் கொள்கைகளுக்குச்
சூட்டப்பட்ட
வெள்ளைக் கேள்விக் குறிகள்

காலனின் கட்டளையில்
வலுக்கட்டாயமாய்த்
துறவிகளாக்கப் பட்டவர்கள்

இன்றைய
அலங்கார மேடைப்பேச்சுகளில்
மட்டுமே
புதுவாழ்வு பூண்டவர்கள்

நிலவுக்கு ஏணி வைத்தவர்களுக்கு
நிலவாக்கப்பட்டவளைக்
கரைசேர்க்க அறிவு போதவில்லை

முல்லைக்குத் தேரீந்தவர்களுக்கு
வெள்ளைச் சேலைக்கு
வர்ணம் பூச நெஞ்சம் போதவில்லை

மனைவி செத்த மறுநாளே
புது மாப்பிள்ளையாகும்
சுயநலக் கோழைகளுக்கு
அறுந்த பட்டத்தின் நூலைப்பிடிக்க
வீரம் போதவில்லை

விலைமாதின் எச்சில் தொட்டியில்
மாணிக்கம் தேடுபவர்கள்
விதவையின் எச்சில் கண்டு
முகம் சுளிக்கிறார்கள்

காதல்
கன்னியருடன் மட்டும்தான்
என்று
வரையறுத்துவிட்டார்கள் போலும்

பாரதிதாசனின் 'வேர்ப்பலாக்கள்'
சிதைந்து அழுக
புறக்கணிக்கப்படுகின்றன

'தனியொருவனுக்கு உண்ண
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'
என்ற பாரதியின் பாரதத்தில்
இவர்கள் பட்டினி போடப்படுகிறார்கள்

உடன்கட்டை தீதென்றோம்
உடனெரிப்பது கொடூரமென்று
ஆனால் இன்று
அணு அணுவாய் எரிக்கின்றோம்

கிளியைப்
பூனையிடமிருந்து விடுவித்து
கூண்டிலல்லவா அடைத்துவிட்டோம்

சிறகறுந்த கிளி பறக்கச்
சிறகளிப்போம்

இல்லையேல்-
எவருக்கும்
சிறகுகளே வேண்டாமென
அறுத்தெறிய வாளெடுப்போம்.

No comments: