காதல் தலைசாய்வதோ

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

ஏந்திய கரங்களில் தேனமுதாய் - உள்ளம்
எடுத்துக் கொடுத்தபின் ஏன் தயக்கம்
தூரிகை எடுத்துவா கண்ணோரம் - என்னைத்
தொட்டு வரையலாம் சிந்தூரம்

ஆவிக்குள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாய் - அன்பே
ஆசையைச் சொன்னாலோ ஓடுகின்றாய்
தேனிதழ் பாடிவா தேவதையே - என்னைத்
தேற்றிட நீயல்லால் வழியில்லையே

பூமுகப் புன்னகை மொட்டாவதோ - பொழுதும்
புரியாத மௌனங்கள் நமை உண்பதோ
சூரியன் கண்ணீரில் கரியாவதோ - அந்தச்
சூத்திரம் சொல்வதுன் விழியாவதோ

காதலன் பொன்மனம் புண்ணாவதோ - அந்தக்
கொடுமையின் காரணம் நீயாவதோ
தாமதம் காதலின் பயிர்மேய்வதோ - பெண்ணே
தாகத்தால் உனதெந்தன் உயிர் சாய்வதோ

மானிடம் பூத்தது காதலுக்காய் - அந்த
மன்மத ராகங்கள் வாழ்வதற்காய்
தீந்தமிழ்ச் சொல்லென என்நாவினில் - என்றும்
தித்திக்கத் தித்திக்க உன் வாசமே

சாவதும் வாழ்வதும் நமதல்லவா - பழைய
சாத்திரம் சொல்வதும் சதியல்லவா
போவதும் புதைவதும் உயிரல்லவா - உறவில்
பொய்மை நம் கழுத்துக்குக் கயிறல்லவா

மானோடு மலராடும் பூஞ்சோலையில் - உந்தன்
மடியோடு மடியாக நானாகணும்
தேனூறும் ஒவ்வோரு எழுத்தாகவே - உன்னைத்
தினந்தோறும் எழுதி நான் கூத்தாடணும்

யாரோடும் சேராத நம்மாசைகள் - மண்ணில்
யாருக்கும் புரியாமல் போனாலென்ன
ஊரோடும் உறவோடும் கைதாவதோ - வேறு
உலகங்கள் சொன்னாலும் தலைசாய்வதோ

No comments: