சுட்ட வீரப்பன் வேண்டுமா?


சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

அதிரடி மரத்தின்
கிளைகளிலிருந்து
நழுவி விழுந்த வினாவிற்குத்
தம் பெருங்குரல் சுருக்கி
ஓசை மண் ஒட்டாமல்
விடை மொழிந்திருப்பார்
முன்பே யாரோ

உலகறிய இவ்வேளையில்
ஒலிபெருக்கிகள் கதறும்போது
கீழே நிலத்தில் நிற்கும்
அறிவுக் கண்கள்
கிழக்கு வான் காலையாய்த்
திறந்து கொள்கின்றன

சுட்ட வீரப்பன் நம்மூரில்
சட்டென்று ஆகிவிடுகிறான்
தியாகி

ஊதி ஊதி
உணர்ச்சி அடுப்புகளில்
மகாத்மாவாகக்கூட
சுடர் நீட்டக்கூடும்

பத்திரிகை பசிக்கு
ஒன்றிரண்டு கூட்டோடு
கொஞ்சமாய் அப்பளம் நொறுக்கி
அரைவயிறு நிறையலாம்
அவ்வளவுதான்

சுடாத வீரப்பன்
அரசியல் விசமிகளின்
அடிமடி குதறும் வியாதி

சட்ட வளாகங்களில்
சத்தமாய்ப் பேசப் பேச
கூவத்தில் மத்தாடக்கூடும்
மூக்குவெடிக்க

ம்ம்ம்....
இவ்வளவு பொறுத்த காவல்
இன்னும் கொஞ்சம்
பொறுத்திருக்கலாம்
தானே செத்திருப்பான்
வயதான பழம்

அடுத்து....

சந்தனமில்லாத ஒரு
மனிதக் கடத்தலோடு
காட்டு மத்தியிலிருந்து
கடிதில் வந்து சேரலாம்
ஓர் தகவல்
அடுத்த வீரப்பன் யாரென்ற
அறிவிப்போடு

கூட்டு அதிரடிப்படை
வீட்டில் கொஞ்சம்
பாட்டு கேட்கும் அதுவரைக்கும்

காட்டுராணி கோட்டையிலே
காவல்கள் இல்லை
அங்கே
காவல் காத்த நாட்டுத் துரோகி
உயிருடன் இல்லை

சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

வீரப்பன்கள் வேண்டாம்

ஐயா அப்துல் கலாமோடு
அவசரகதியில்
ஈராயிரத்து இருபது நோக்கி
நிறைய
நடக்கவேண்டி இருக்கிறது
இந்தியா

No comments: