09

தாமதம்

நான் கனடா வந்து இறங்கினேன். இறங்கியதும் ஒரு தமிழ் விழாவில் கலந்துகொண்டேன். ஒருவர் மீதமில்லாமல் எல்லோருமே தாமதமாகவே வந்தார்கள்.

நடத்துனர்களும் தாமதம் பங்களிப்பாளர்களும் தாமதம் பார்வையாளர்களும் தாமதம்.

அட கனடாவில்கூட தமிழர்கள் இப்படித்தானே என்று நொந்தேன். அப்போது வந்துவிழுந்த கவிதைதான் இது. நிறைய பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் பாராட்டியவர்கள்கூட நேரத்தோடு நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. கேட்டால் இதுதான் TST என்றார்கள். Tamils Standard Time.

அன்றிலிருந்து நேரத்தை உயிருக்கு நிகராக மதிக்கவேண்டும் என்று நான் சொல்லியே வருகிறேன். என்றாவது ஒருநாள் நான் தாமதமாக வரும் நாளை பிடித்துக்கொண்டு என்னைக் கொல்ல எப்போதும் சிலர் தூண்டில்களோடு அலைகிறார்கள்.

எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்ளாமல் எந்த நல்ல விசயத்தையும் யாருக்கும் சொல்லிவிடமுடியாது.

ஆனால் டொரோண்டோவில் அ. முத்துலிங்கம் அவர்கள் ஒரு முன்னுதாரணம். நேரம் தாண்ட விடுவதே இல்லை. எவருக்கும் என்றாவது ஒருநாள் அல்லது இருநாள் சறுக்கல் நிகழலாம் ஆனால் சறுக்குவற்காகவே சாக்குகளைச் சேகரிப்பது கொடுங் குற்றம்.

*

அவசரச் செய்தியுடன்
அதிகாலை வரும்
செய்தித்தாள் பொடியன்

ஏழுக்கே வரவேண்டிய
எங்களூர்ப் பேருந்து

இதோ வருகிறேனென்ற
சக தொழிலாளி

ஒரு நொடியில்
தயாரென்ற இல்லாள்

எட்டே முக்காலுக்குத்
தரையெட்டும் விமானம்
மாலை வரவேண்டிய
மாண்புமிகு மந்திரி

என்று எல்லோரும் இங்கே
தாமதிக்கிறார்கள்..

வார்த்தை தந்துவிட்டால்
நெஞ்சுக்குள்
மணிச்சத்தம் கேட்காதா

நேரம் தாண்டும்போது
உயிருக்குள்
புயலொன்று வீசாதா

அதெப்படி
ஆறுக்கே வருகிறேனென்றுவிட்டு
ஆறிப்போய் நிற்பது

எட்டுக்கு வருகிறேனென்றவர்
ஏழுக்கு வந்து நிற்பார்
காலைக்குப் பதிலாய்
மாலை

நேரம் தவறாமை
நம் உயிரல்லவா
எத்தனை முறைதான்
அதைத் தூக்கிலிட

இங்கே
நேரத்தே வருவது
வேதனை மட்டுந்தானோ

பசி தாமதித்தால் நோய்
இதயம் தாமதித்தால் மரணம்
மனிதன் தாமதித்தால்
மனநோய்தானே

தாமதமே கௌரவம் என்பவனை
என்னவென்றழைப்பது

தருணத்தில் வாரா ஞாபகமும்
காலத்தே வாரா அறிவும்
துயரக்கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்

பொங்கும்போதே
இறக்காத பால்
பாழ்தானே

நேரத்தே காணா புண்
புற்றுநோயல்லவா

ஏனய்யா தாமதமென்றால்
எலி செத்துவிட்டது
அதன் ஈமக்கடனில்
தாமதமாகிவிட்டது
என்பார் சிலர்

காருக்குக்
கால் தடுக்கிவிட்டது
கைப்பிடியில்
பெட்ரோலும் இல்லை
என்பார் சிலர்

தாமதம் என்ற தப்புத்தானே
நம்மைப் பொய்புனையும்
குற்றவாளியாக்கியது

தாமதிப்போம்
கைமீறும் காரணங்களில்
நாம் தாமதிப்போம்

ஆனால்
தாமதமே சம்மதம் என்று
தரங்குறையலாமா

அன்புடன் புகாரி
19991106

No comments: