16

பூரித்துப் பூரித்துப்
பத்தே நிமிடங்களில்
பன்மடங்காய்ப் பெருத்துவிட்டேன்

எத்தனை ஜென்மங்கள் கழித்து
உன் யாழிசையை
என் செவிக் கூடத்தில்
இதயவாசம் மணக்க மணக்க
மீட்டுகின்றாய்

உன் பனிமுகம் கண்டறியா
என் கண்கள் கொதிக்கின்றன

ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன்

பேருந்து நிறுத்தத்தில்
ஒரு நிமிடம் விழிமூடி
மௌன தீபம் ஏற்றலாம்

பார்த்தால் பசிதீரும் என்று
முணுமுணுத்துக்கொண்டே
ஏதோ ஓர் பேருந்தில்
இலக்கின்றி ஏறிக்கொள்ளலாம்

என் பெயரை நானே சத்தமாய்க் கூவி
ஏதேனும் ஓர் ஐம்பது கிலோ
திரும்பிப் பார்க்கிறதா என்று
தமிழ் சினிமாவைப் போல் பித்தாடலாம்

அல்லது
இதில் எதையும் செய்யாதே
சிறகுகளைக் காற்றில் கழுவிக்கொண்டு
பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம்

சொல்...
உனக்குத்தான் என்மீது
கொஞ்சமோ கொஞ்சமாய்க்
கொஞ்சிக் குதித்தாடும்
நெஞ்சத் துடிப்பிருக்கிறதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

இது கவி - கவிஞரே..

கரந்தை ஜெயக்குமார் said...

நற்கவி கவிஞரே
நன்றி

KarpagamElangovan said...

அருமை!
குரல் வழி உயிரூட்டும் உயிர்கள் வாழி.