64

இன்று காலை நீ அழைத்தாய்
என் தொலைபேசி
அதை எனக்குத் தெரிவிக்கவில்லை

அது தெரிவித்திருந்தாலும்
என் செவியை என்னால்
அதற்குத் தந்திருக்க முடியாது

ஏனெனில் என் செவி அப்போது
என்னிடம் இல்லை

வார்த்தைகளால் பற்றியெரிந்த
முதல் நாள் நெருப்பு

அதைக் கொளுத்திக் கொளுத்தி
ஈமக்கிரியையும் பொறுப்பாய்ச்
செய்து முடித்துவிட்டதை
என் தொலைபேசி
தெளிவாகவே அறியும் என்பதால்
என் தொலைபேசி
எனக்கு உன் அழைப்பைச்
சொல்லவில்லை

குற்ற உணர்வில் இன்று நான்
என் தொலைபேசியிடம்
கடிந்துகொண்டேன்

ஒருநாளும் இப்படி நீ
எனக்குச் செய்யமாட்டாயே
நேற்று மட்டும் ஏன் அப்படிச்
செய்தாய் என்று

எனக்கும் இதயம் இருக்கிறது
என் இதயமும்
நின்றுபோய்த்தான் இருந்தது

உன்முன் யார் அழுதாலும்
உன் உயிரைக்
கழற்றிக் கொடுத்துவிட்டு
ஒடுங்கிக் கொள்கிறாயே

உன்னுடனேயே இருக்கும்
என் உணர்வுகளையும்
நீ புரிந்துகொள்ளக் கூடாதா
என்று என் தொலைபேசி
என்னிடம் திருப்பிக் கேட்கிறது
நான் என்ன செய்யட்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: