என்றுமே இணையாமல்...


என்றுமே இணையாமல்
இணையப் போகிறோம் என்று
வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்
தண்டவாளங்களாய்த்தான்
இந்த
வாழ்க்கையும் கனவுகளும்
முகம் காட்டுகின்றன

மனிதனின்
மகா சக்தியின்முன்
இது எப்படி
உண்மையாக முடியும்?

மனக் கனவுகள்
மெய்ப்பட்ட போதெல்லாம்
புதிய கனவுகள்
பொன் மின்னலாய்ப் புறப்பட்டு
வென்ற கனவுகளை
வர்ணங்களில்லா
வெற்று வாழ்க்கையாக்கி

மீண்டும் அந்த
இணையாத் தண்டவாளங்களாய்
வாழ்க்கையோடு
வம்பிழுத்துக்கொண்டு
ஓட ஓட

அடடா...
அந்தத் தத்துவம்
எனக்குப் புரிந்துவிட்டது

நிறைவேறியது என்று
இந்த நெஞ்சு
அமைதி கொண்டால்
புதிய கனவுகளும் இல்லை
வாழ்க்கையும் இல்லை

2 comments:

Aruna said...

//நிறைவேறியது என்று
இந்த நெஞ்சு
அமைதி கொண்டால்
புதிய கனவுகளும் இல்லை
வாழ்க்கையும் இல்லை//

யதார்த்தம் நிறைந்த உண்மை..
நன்றாக இருந்தது! இன்னும் இன்னும் என்னும்போதுதான் புதிய கனவுகளும் ,அதை நோகிய பயணங்களும்!!!!இல்லையென்றால் வாழ்க்கை வெறுமை!
அன்புடன் அருணா

Unknown said...
This comment has been removed by the author.