வாலிபமே வாலிபமே


ஈடற்ற நிம்மதியும்
இதயம்
நிறைத்தக் குதூகலமுமாய்
இனித்துக் கிடந்த
என்
பிஞ்சுப் பிராயத்தைத்
தாண்டிவர
எனக்குள் அன்று
எந்த
எதிர்ப்பும் எழவில்லை

இன்றோ
விசக் கொடுக்கால்
முத்தமிடும்
ஏமாற்றங்களும்

பொறுக்க மாட்டாத
தவிப்புகளும்

புரையோடிய
நினைவுகளும்

சுட்டுச் சுட்டுச்
சுகங்காணும் உணர்வுகளும்

ஆழத்தில் புதைந்து விட்ட
அமைதியுமாய்

நான்-
கிழிந்து
குரலுடைந்து
விடியல் விடியலென்று
வரமாட்டாத
ஏதோ ஒன்றுக்காய்
நிரந்தரமாய்
விக்கித் தவித்தாலும்

இந்த
வாலிபத்தைத்
தாண்ட மட்டும்
என் இதயம்
அனுமதிக்க மறுப்பது ஏன்?

1 comment:

Anonymous said...

அது வாலிபத்தின் மீதுள்ள காதல் - துயரப்படினும் தாண்ட மனம் மறுக்கும் காரணம் காதல் மட்டுமே
அன்புடன் ..... சீனா