கறுப்புநிலா

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்
என்ன சம்பந்தம்

விழிக்குஞ்சுகளை
இமைப்பரண் ஏறவைக்கும் இக்கேள்வியை
மோனைத்தனமாய்க் கேட்டவர் யாரோ எவரோ

ஆனால்...
கறுப்புநிலா கண்டுதானே
மாதமொன்று நிறைந்துபோன
உண்மையறிகிறான் அப்துல்காதர்

பெருநாளையும் நோன்பையும்
அவனுக்கோர் உற்சாக மணியோசையாய்
உணர்த்துவதுதான் எது

வெள்ளை நிலா என்றொரு நிலா
நம் வானமாளிகையில் உண்டா

பூசிக்கொள்ளும் அரிதாரமே
மெய்முகமென்று சத்தியம் செய்யும்
திரைக்கதாநாயகியா நம் நிலா

வானத்தின் நிறம் நீலமென்றும்
நிலவின் நிறம் வெள்ளையென்றும்
இன்னும் நம்பித் தொலைக்க
இது என்ன ஹைதர் காலமா

பௌர்ணமி என்று நாம் பிதற்றும் வட்டநிலா
முழுமொத்தமும் வெள்ளைதானா
அதன் முதுகெங்கும்
பத்தை பத்தையாய் அப்பிக்கிடப்பது
சுத்தமான கறுப்பல்லவா

முழுமொத்த வெள்ளையென்பது
நிலவின் வாழ்வில் வாய்க்குமா
எந்த நொடியிலும்

பூமிக்குடை புகுந்து
சூரியச் சுடுவிழி தொடாத குருட்டுச் சிறைக்குள்
சிக்கிக்கொள்ளும்போது
நிலா என்ன நிறமாம்

கறுப்பென்று ஆனதால் மட்டும்
நிலவென்னா குறைந்தா போகும்

உலகப் பேரழகி
கிளியோபாட்ரா மட்டுமல்ல
உலகின் முதல் மனிதனே
கறுப்புநிலாதானே

அது மட்டுமா
இந்த அண்டமே ஓர் அழகு கறுப்பு
அந்தச் சத்தான கறுப்புக்குள்தானே
சகலமும் இருப்பு

No comments: