வெள்ளாவியில்...


வெடிச்சு வெடிச்சுச் சிதறும் மனசு
வெள்ளாவியில் கிடக்குது
வெட்டுப்பட்டப் பல்லி வாலா
துடிச்சுத் துடிச்சுச் சாகுது

இனிப்புத் தொட்ட நாக்குநுனி
நெருப்புக் காட்டில் வேகுது
உசுரை மடிச்சு வெத்திலையாப்
போட்ட வாயி சிவக்குது

பருந்து கிழிச்ச சுண்டெலியா
மனசு நாத்தம் அடிக்குது
கிழிஞ்ச கூளம் கூட்டிவெச்சு
நெனப்பு நரியும் திங்குது

விழிப்பில்லாத தூக்கம்தேடி
கண்ணு ரெண்டும் ஏங்குது
விழிச்சு விழிச்சுப் பாத்துப்புட்டு
விம்மி விம்மிக் கதறுது

நெனப்புச் சுமை தாங்காம
மனசு எலும்பு நொறுங்குது
நொறுங்க நொறுங்க விட்டுடாம
நெனைப்புச் சுமையும் உசருது

அவமானச் சின்னமாகி
ஆவி கிடந்து அலையுது
கண்ணாடிப் பிம்பத்தையும்
காரிக் காரி உமிழுது

உச்சு முதல் பாதம்வரை
ஊசியேறிக் கிடக்குது
ஊசிமேல ஊசியேற்ற
வெந்த மனசு கெஞ்சுது

No comments: