40 என்னோடு பேசாதே


என்னோடு கொஞ்சம்
பேசாமலிருக்க மாட்டாயா?

நான் இந்தத்
தத்துவஞானியின்
உரையைக் கேட்க வேண்டும்
தயவுசெய்து தொல்லை செய்யாதே
அப்படி ஓர் ஓரமாய் ஒதுங்கி நில்

நீ சொல்வதைத்தான்
நான் எப்போதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறேனே

முக்கியத்தர்களோடு நான்
மூச்சுமுட்ட உரையாடும்போதும்
நரைமுடியைப்போல் நீ
நடுவில் வந்து நிற்கவேண்டுமா

ஏன் அவ்வப்போது
என்னை வேரோடு திருடிக்கொண்டு
நான் சபையில் நிற்கையிலும்
அசிங்கப்படுத்திவிடுகிறாய்

நீ யார்
என் மனதின் நிழலா
அல்லது
மனது ஒளித்துவைத்திருக்கும்
மந்திர மனதா

அவசரத் தேவையில்
நான் அல்லாடும்போது
ஒருநாளும் நீ உடனடி முடிவோடு
என்னிடம் வருவதில்லை

ஆனால்
நான் செய்த தவறை
சகல சாட்சியங்களோடும்
சொல்லிச் சொல்லி என் தலையில்
கொள்ளிவைக்க மட்டும்
முழுச் சக்தியோடு வந்து
நெற்றிப் பொட்டு மேடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகிறாய்

ஏன் என்னோடு பல நேரங்களில்
பாரபட்சமே இல்லாமல்
முரண்படுகிறாய்

நடந்து முடிந்ததற்கு
நமக்குள் ஒரு வழக்கு தேவையா

என்னைக் குற்றவாளியாக்கி
கூனிக்குறுகச் செய்து
நீ சாதிப்பதுதான் என்ன?

இன்னொரு குரலால்
மறுபரிசீலனைச்
சிந்தனை தொடுக்கும்
நீ என் பலமா

தொட்டதை முடிக்கவிடாமல்
முடித்ததில் திருப்தி தராமல்
அலைக்கழிக்கும் நீ என்
பலகீனமா

என் வெற்றியும் நீ
தோல்வியும் நீதானா?

உள்ளுக்குள் உட்கார்ந்து
நிரந்தர ஆட்சி செய்யும்
என் அதிசயமே

உன்னால்தான்
நான் தனிமைப் பட்டாலும்
அந்தத் தனிமையைச் சுமக்கத் தெம்பற்று
செத்துச் சுடுகாடாகிப்போய்விடாமல்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

No comments: