சந்தர்ப்பங்கள்

சிரிப்புகள் மலரும்
சிறுவயதுக் கொடியிலும்
விருப்புகள் காய்க்கும்
விடலைச் செடியிலும்
வெறுப்புகள் பழுக்கும்
வளர்ந்த கிளையிலும்

ஆசைகள் தேம்பி நிற்க
சந்தர்ப்பங்களே வெல்கின்றன

தாக விழிகளுக்குள்
நிரந்தரமாய்த் தங்கிவிட்ட
பாரம் தாளாமல்
உயிர்த் தீப்பந்தம் கொளுத்தி
வெறித்தேடல் தொடங்கினாலும்
பெற்றடைந்த பொக்கிசங்களையும்
தட்டிப்பறித்துச் சிரிக்கின்றன
பொல்லாத சந்தர்ப்பங்கள்

வாழ்வுதரும் கணங்களும்
வெறுமைதரும் பொழுதுகளும்
சந்தர்ப்பங்கள்

ஒரு சந்தர்ப்பத்தை வெல்ல
இன்னொரு சந்தர்ப்பத்துக்காய்க்
காத்திருக்கவேண்டி இருக்கிறது

நல்ல சந்தர்ப்பங்களைக்
கவர்ச்சிச் சந்தர்ப்பங்கள்
கொன்றழிக்கின்றன

தேடிப்போகும் விழிகளில்
எதிர்ப்படும் சந்தர்ப்பங்கள்
தேடிப்போனவைபோல்
பாவம் காட்டுகின்றன

வேண்டாமென்று விரட்டியடித்த
விடாப்பிடிச் சந்தர்ப்பங்கள்
ஓடிப்போனவைபோல் தந்திரம்காட்டி
உட்கார்ந்திருக்கின்றன
நாம் ஏமாறும் நொடிக்காக

எந்த சந்தர்ப்பத்திலும்
தவறிவிடா வைராக்கியத்தையும்
அறுக்க ஒரு வலிய சந்தர்ப்பம்
வந்து வாய்த்துவிடுகிறது

ஆம்...
வாழ்க்கைச் சிறுமலரின்
ஒவ்வொரு இதழும்
சந்தர்ப்பங்களால் ஆனதுதான்

கனவுகளுக்குள்ளும்
கலை இலக்கியத்துக்குள்ளும்
நம் நிழல்களைத் தள்ளிவிட்டுவிட்டு
நிஜங்களை ஆள்கின்றன
நாமாகவே வாழ்கின்றன
எல்லா சந்தர்ப்பங்களிலும்
சந்தர்ப்பங்கள்

1 comment:

சாந்தி said...

ஆசைகள் தேம்பி நிற்க
சந்தர்ப்பங்களே வெல்கின்றன



எந்த சந்தர்ப்பத்திலும்
தவறிவிடா வைராக்கியத்தையும்
அறுக்க ஒரு வலிய சந்தர்ப்பம்
வந்து வாய்த்துவிடுகிறது

ஆம்...
வாழ்க்கைச் சிறுமலரின்
ஒவ்வொரு இதழும்
சந்தர்ப்பங்களால் ஆனதுதான்

கனவுகளுக்குள்ளும்
கலை இலக்கியத்துக்குள்ளும்
நம் நிழல்களைத் தள்ளிவிட்டுவிட்டு
நிஜங்களை ஆள்கின்றன
நாமாகவே வாழ்கின்றன
எல்லா சந்தர்ப்பங்களிலும்
சந்தர்ப்பங்கள்


அருமையான வரிகள்..