கைகளைக் கட்டிப்போட போதிக்காதீர்


எக்கணமும் எவர்முன்னும்
கோபமாய்க் கொப்பளிக்க
விருப்பற்றவனே
நான்

சத்தியம் மொழிவதாயின்
கோபத்தைக்
காலைக்கடன் முடிப்பதற்கும்
முன்னதாகவே
ஓர்
அதிகாலைக்கடனாய்
அகற்றிவிடலாமென்றுதான்
ஆசைப்படுகிறேன்

எனினும்
அறுத்தெறியப் படவேண்டிய
சாக்கடை நாக்குகள்
புனிதத் தருணங்களிலுங்கூட
அளவுக்குமிஞ்சி
அலட்டிக் கொள்ளும்போது
என்னை
என் ஆசனத்திலேயே
நிரந்தரப் படுத்திக் கொள்ள
இயலுவதில்லை

அறையப் படாத அடுத்த கன்னமும்
அகப்படாதாவென
எச்சிலூறிக் காத்திருக்கும்
எச்சங்களே
மனிதமன மிச்சங்களாகும்போது

அந்த ஏசுபிரான்
திருப்போதனையின்
வழிநடக்கத்
தெம்பற்றே போகிறேன்

திராவகமே
தேகக் குருதியாகிப்போன
கொடூரர்களிடமும்
புத்தபிரானின் பொன்மொழி கேட்டுக்
குசலம் விசாரித்துக் கொஞ்சிப்பேச
என் பிஞ்சுமனம்
மறுதலிக்கவே செய்கிறது

தயைகூர்ந்து
இங்கே எவரும் என்னை
இடைமறிக்காதீர்

என்
கைகளைக் கட்டிப் போட
போதிக்காதீர்

அழுகுரலில் ஆனந்திக்கும்
அரக்கர்களின் எலும்பொடிக்க
அவ்வப்போது
ஒரு சராசரி மனிதனாகவே
என்னைச்
சஞ்சரிக்க விட்டுவிடுங்கள்

No comments: