55

விழிகள் தந்தாய்
கனவுகளைக் காணவில்லை
இதயம் தந்தாய்
நினைவுகளைக் காணவில்லை
இதழ்கள் தந்தாய்
வேர்களைக் காணவில்லை

கனாக்களற்று
நினைவுகள் மறந்து
வேர்கள் மண்மாறிய பொழுதில்
மூடிய இமைகள் காட்டினாய்
என் உயிரைக் காணவில்லை

மீட்டுக்கொண்டு போக
நான் அடகு கடையா வைத்திருந்தேன்
வட்டி தருகிறேன் என்று
வாட்டி எடுக்கிறாய்

உன்னுடையது என்று
இங்கே எதுவுமே இல்லை
என்னைத் தவிர என்று
குருதிக் கண்ணீர் விரிக்கிறேன்

மாற்றுப் பொருள் எனக்கெதற்கு
என்ற உன் நிராகரிப்புக்கு
பதில் சொல்லத் தெரியவில்லை
திவாலாகிவிட்டேன்

வந்து மூடிவிட்டாவது போ
திறந்து கிடக்க்கிறது
இன்னமும் என் நம்பிக்கை

சாவி தொலைந்த பூட்டாய்
வாய் பிழந்து கிடக்கிறது
மரணக் கதவோரம் என் குற்றுயிர்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: