65

விழி வேர்களை உப்புக் கண்ணீர்
ரம்பப் பற்களால் அறுத்தெறிய
கைகளில் விழுந்த என் கண்களை
வாரி எடுத்துக்கொண்டு
ஓடிவந்தேன் உன்னிடம்

அடி பெண்ணே
உன்னால் கழன்று விழுந்தவற்றை
உன்னால்தான் பொருத்தமுடியும் என்று
உயிரழிய மன்றாடினேன்

என் குமுறல்களை
ஓரமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு நீயோ
உன் வாழ்க்கை வளம் பெற்றதற்கு
எனக்கு நன்றிகள் சொன்னாய்

எனக்கென்று உன்னிடம் மீதமிருப்பவை
இந்த நன்றிகள் மட்டுமே என்று
நெகிழ்வோடு கூறி உதடு பிதுக்கினாய்

உனக்கு நான் கவிதைகள் என்ற
நிரந்தரமான ஊன்றுகோல்
கொடுத்திருக்கிறேன் பார் என்று
உன் கருணையை நீயே
போற்றிப் புகழ்ந்துகொண்டாய்

பொற் கைத்தடியால்
நடை பழகிக்கொண்டே நானும்
உனக்கு நன்றி சொல்கிறேன்
நம் நன்றி உணர்வுகள் வாழ்க

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: