என் கண்களால் அல்ல
என் கவிதைகளின் விழிகளால்
உன்னையல்ல உன் கவிதைகளை
நானல்ல என் கவிதைகள்
பார்த்துப் பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கின்றன

உன் குரல் இழுத்துவரும்
உன்னோடு அல்ல
உன் கவிதைகளின் இதயத்தோடு
நானல்ல என் கவிதைகளின் செவிகள்
துள்ளிக் குதித்துக் கூத்தாடுகின்றன

புலன்களால்தான் உணர முடியுமாம்
கண்டு கேட்டு நுகர்ந்து ருசித்து தீண்டியது
உன்னையல்ல உன் கவிதைகளை
என் புலன்களால் அல்ல
என் கவிதைகளின் இழைகளால்

நானல்ல
என் கவிதைகளின் அலைகள்
நட்புறவாக்கியது உன்னையல்ல
உன் கவிதைகளின் உணர்வு நதிகளை

ஆழத்தில் வேர்களில் உயிரின் ஈரத்தில்
நானல்ல என் கவிதைகள்
உனையல்ல உன் கவிதைகளை
உணர்ந்ததும்
என் கவிதைகளல்ல
விலக முடியா உயிராகிப்போனது

No comments: