11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

1 comment:

mohamedali jinnah said...

புகாரி நீ ஒரு பூக்காரி
வார்த்தைகளால் நீ தமிழுக்கு மாலை சூட்டுகிறாய்
உமக்கு நான் அளிக்கும் மாலை (பட்டம்) உலக கவி அன்புடன் புகாரி