ஐ-பேடில் அழகுதமிழ் செல்லினம்

முத்தழகா
முத்து நெடுமாறா
தமிழைக்
கணியுலகக் கன்னத்தில்
முத்து முத்து முத்தங்களாய்
முப்பொழுதும் பதிக்கும்
வித்தகா

மெல்லினம் வல்லினம்
இடையினம் காட்டும்
தமிழழகியின் மடியில்
சொக்கி விழுந்த நான்
இன்னமும்
எழுந்து கொள்ளவே இல்லை

அதற்குள்
உன் செல்லினத்திலும் விழுந்து
சிறைபட்டுப் போவதா?

அடடா
அந்த சிறைக்குள்தான்
எத்தனை எத்தனை லட்சங்களில்
வண்ண வண்ணச் சிறகுகள்?

செல்லினச் சுந்தரா
முத்தெழில் முத்து நெடுமாறா
உனக்கு இத்தமிழனின் நன்றிகள்
காலத்தால் காய்ந்துபோகாத
கோடி கோடிக் கணிப்பூங்கொத்துக்களாக

அன்புடன் புகாரி
20110312


ஒரு கனவு

வளைந்த எழில்
வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய்
கதிரோன் ஒளிர

அவள்
கழுத்து ஆரமாய்
கோள்கள் அத்தனையும்
கோத்துக்கிடக்க
ஓரமாய்
அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய்
மோவாயில் மிளிர

செவ்வாய் மட்டும்
கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால்
கவிதைகள் சொல்ல

அந்தக்
கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச்
சொற்களேந்த

பேரண்ட வெளிகளெங்கும்
தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல்
பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க

அட
இதையெல்லாம்விட
அதிசயமாய்

அண்டசராசரப்
பேரதிசயமாய்

ஆரும் கண்டிராத
தேவ அதிசயமாய்

தமிழன்
தமிழில் மட்டுமே
உரையாடுவான்

மொழி ஒரு வாகனம் மட்டும்தான்


நேற்று நவம்பர் 5, 2011 டொராண்டோவில் எழுத்தாளர் நரசய்யா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை வெற்றுச் சொல்லும் இல்லாத அதே சமயம் மிக இயல்பான பேச்சாக அது இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. தமிழன் புனைவிலக்கியங்களில் காட்டிய அக்கறையை ஆராய்ச்சி இலக்கியங்களில் காட்டவில்லை என்ற உண்மையைப் பல சம்பவங்களின் மூலமாக உணரச்செய்தார்.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் பாரதி, இந்தியாவில் முதலில் விமானம் வாங்கியவர் ஆவுடையப்பச் செட்டியார் என்ற தமிழர், கப்பல் என்பது தெலுங்குச் சொல் என்று பல சுவாரசியமான தகவல்களை அநாயாசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நீயா நானா கோபிநாத் மொழியைப் பற்றி இவரிடம் கேட்டபோது, மொழி ஒரு வாகனம் மட்டும்தான் அதுவே போய்ச்சேரும் இடம் அல்ல என்று கூறியதாகச் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்தததும் நரசய்யாவோடு தனியே உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. ஐயா ஒரு சிறு கேள்வி, உங்கள் கடல்வழி வாழ்வில் எத்தனையோ மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்வதையும் வாழ்வதையும் கண்டிருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள், அவர்கள் சென்ற இடங்களின் தங்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற சொந்த அடையாளங்களைத் தொலைக்காமல் வாழ என்னென்னவெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள், ஒவ்வொன்றாக கூறுங்கள் என்று கேட்டேன்.

மொழி மட்டும்தான் என்று சட்டென பதில் அளித்தார். என்றால் மொழி என்பது ஒரு வாகனம் மட்டும்தான் அதே சமயம் சுய அடையாளத்தோடு வாழும் பலருக்கு அதுவே வாழ்க்கை என்று அவர் கூறுவதாக நான் எடுத்துக்கொண்டேன்.

இவரின் எந்த நூலை வாசிக்காவிட்டாலும் ’கடல்வழி வணிகம்’ என்ற நூலை கட்டாயம் வாசித்துவிடுங்கள் புகாரி என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என்னிடம் கூறினார். நரசய்யாவின் அத்தனை எழுத்துக்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற ஆவல் மூளையில் கோடு கிழித்துக்கொள்ள விடை பெற்றுக்கொண்டேன்.

ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்

டியர் மிஸ்டர் கடவுள்ஸ்,
உங்களது மத பொஸ்தகங்கள் மற்றும் உங்களது தூதர்களின் வாழ்க்கை வரலாறு வகையறாக்களை பூமியில் இருந்து அள்ளிக்கொண்டு போகவும். உங்களால் பட்டது போதும்

நோர்வே ‍ - கிறிஸ்த்துவ தீவிரவாதத்திற்கு பலி
இந்தியா - இந்து இஸ்லாம் தீவிரவாதத்திற்கு பலி
இலங்கை - பௌத்த தீவிரவாதத்திற்கு பலி

இது வரை உங்களால் செத்தவன் எல்லாம் மனிதர்களே.
உங்களுக்கா​ன சண்டையில், இதுவரை எந்தக் கடவுளும் சாகாதது எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. ஏன் என்றால் தலைவர்கள் என்று தீக்குளித்து உள்ளார்கள்?

(எழுதியது நானல்ல. இது ரீங்காரத்தில் கண்டெடுத்த முத்து)

நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!


நிகழ்ச்சி இரண்டு:

அதே சவுதி அரேபியா. அதே அலுவலகம். இப்போது ஒரு ஹைதராபாத் அப்துல் கதீர்.

அப்துல் கதீர் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான். அவன் இந்தியனா பாகிஸ்தானியா அல்லது பங்களாதேசியா என்று தெரிந்துகொள்ள நீ எந்த நாடு என்று கேட்டோம்.

”ஹைதராபாத்” என்றான்.

”ஓ இந்தியாவா” என்று கேட்டோம்.

”இல்லை. ஹைதராபாத்” என்றான்.

”ஹைதராபாத் இந்தியாவில்தானே இருக்கிறது? உன் நாடு எது என்று கேட்டால் இந்தியா என்றுதானே சொல்லவேண்டும். உன் ஊர் எது என்று கேட்டால்தானே ஹைதராபாத் என்று சொல்லவேண்டும்” என்று கேட்டோம்.

”இல்லை. என் நாடு ஹைதராபாத்” என்றான்.

அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிப் போய்விட்டோம்.

(நிஜாம் ஹைதராபத்தை தனி நாடாகக் கேட்டார். ஹைதராபாத் இந்தையாவுடன் இணைந்ததை அப்துல் கதீர் இன்றுவரை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. இனியும் ஏற்க மாட்டான்)


நிகழ்ச்சி மூன்று:

அதே அப்துல் கதீர். அதே நிறுவனம். அதே சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.
வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்...

காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க்
கிடந்தால்...

காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்
மனிதம் மாய்வதற்கு மதம்தான் காரணமா?

மனிதம் மாய்வதற்கு மதம் காரணமல்ல மனித வக்கிரமே காரணம். மனித வக்கிரம் மடிந்தால்தான் மனிதம் தழைக்கும்.

மனித வக்கிரம், சாதி மதம் இனம் மொழி நிறம் நிலம் அரசியல் காசு காமம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி தன் வக்கிரத்தைக் காட்டும்.

இனங்களுக்குள் யுத்தமும் அழிவும் நடக்கிறது என்பதற்காக, மனித வக்கிரத்தை அழிக்காமல் இனங்களை அழித்தால், உலகில் மனித இனம் மொத்தமாக அழிந்துபோகுமல்லவா?

அன்னை தெரிசா, பாரதி, காந்தி போன்ற எண்ணற்றோர் மதம் சார்ந்தவர்கள்தாம். அவர்களால் உலகிற்குக் கேடு விளைந்ததா?

ஒரு மதத்தில் நல்லவரும் இருப்பர். வக்கிர மனிதரும் இருப்பர்.

மதம் அற்றவர்களிலும் நல்லவரும் இருப்பர் வக்கிர மனிதரும் இருப்பர்.

மதத்தில் உள்ள வக்கிரபுத்திக்காரர்களை பார்த்து மதத்தை அழிக்க நினைப்பதும் மதமற்றோரில் உள்ள வக்கிரபுத்திக் காரர்களைப் பார்த்து மதமற்றோரையெல்லாம் அழிக்க நினைப்பதும் அறிவீனம்.

மதங்கள் எல்லாம் இணையவேண்டும். மதங்கள் இணைகின்றன என்றால் அது ஓர் ஆண் பெண் உறவைப்போல. ஆண் ஆணாகவே இருப்பான். பெண் பெண்ணாகவே இருப்பாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பர். ஏற்பர். அதனால் இணைவர்.

அப்படியான இணைவு மதங்களுக்கு இடையே வேண்டும். அதற்குத் தடையானவர்கள் வக்கிர மனம் கொண்டவர்கள்.

மனிதர்கள் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எதை வேண்டுமானாலும் நம்பிச் செல்லட்டும். எதற்கு வேண்டுமானாலும் தாசர்களாய் இருந்துவிட்டுப்போகட்டும். எதன்மீது வேண்டுமானாலும் பக்தி கொள்ளட்டம். அது எதுவுமே மனிதத்தை சாகடிக்காது. ஆனால் மனிதன் வக்கிரம் கொண்டால் அங்கே மனிதம் சாகும்.

ஒருவர் தெலுங்கு பேசட்டும், ஒருவர் தமிழ் பேசட்டும், ஒருவர் இந்தி பேசட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் வானத்தின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் பூமியின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் நெருப்பின்மீது பக்தியாய் இருக்கட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் இந்துவாய் இருக்கட்டும் ஒருவர் முஸ்லிமாய் இருக்கட்டும் ஒருவர் கிருத்துவராய் இருக்கட்டும். அதனாலென்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

மதங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாய்த்தான் மண்ணில் இருக்கின்றன. அதற்குமுன் மனிதன் எப்படி வாழ்ந்தான். முழுக்க முழுக்க மனித நேயத்தோடா? இல்லையே, காடுமிராண்டிகளாகத்தானே வாழ்ந்தான்.

சிலர் மதங்களின்மீது அதீத வெறுப்பு கொண்டுள்ளனர். அதுவும் வெறிதான். மதவெறிக்கு எப்படி மனித வக்கிரம் காரணமாக இருக்கிறதோ அதே போல மத அழிப்பு என்ற வெறிக்கும் மனித வக்கிரமே காரணமாய் இருக்கின்றது.

எந்தக் காலத்திலும் வெறியற்ற வாழ்வுதான் அமைதியான வாழ்வு.

வக்கிரம் கொண்ட மனிதன் எதையோ ஒன்றை கையில் எடுத்துக்கொள்கிறான். மதம், இனம், நிறம், பெண், பணம், பொருள், குடும்பம் என்ற எல்லாமும் அவனுக்கு ஆயுதங்கள்தாம். புதுப்புது ஆயுதம் தேடுவதும் புதுப்புது ஆயுதம் எடுப்பதும் மனித வக்கிரம்தான். மனித வக்கிரம் ஒழிய வேண்டும். அது ஒழியாமல் மனிதம் விமோசனம் அடையாது

மதவெறியன் என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அரசியல் துரோகி என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அந்த மத வெறியனிடமும் அரசியல் துரோகியிடமும் இருப்பது எது? வக்கிரம்தானே?

இன்று மதத்தைவிட அறிவியல்தான் உலக அழிவிற்குக் காரணமாய் இருக்கிறது. துப்பாக்கி தொடங்கி அணுகுண்டுவரை எத்தனை கண்டுபிடிப்புகள்? வேதியல் வெடி தொடங்கி கிருமிக் குண்டுவரை எத்தனை நாசங்கள். ஆகையால் அறிவியலை  அழித்துவிடுவோமா? அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தும் வக்கிரக்காரர்களைத்தான் அழிக்க வேண்டும் அல்லவா?

மதங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள். ஆனால் மதங்களால் முழு வெற்றியைக் காணமுடியவில்லை. அதற்குக் காரனம் இன்னனும் அழிக்க முடியாத வக்கிரம்தான்.

 அதுமட்டுமல்லாமல் எதிர் வினைகளையும் அது உருவாக்கிவிட்டது. அந்த எதிர் வினைகளுக்கான காரணமும் மனித வக்கிரம்தான்.

இலங்கையில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார்களே அது ஏன்? மதம் காரணமா? கடவுள் காரணமா? இனம்தானே காரணம், பாகுபாடுதானே காரணம்? அந்த இனவெறியையும் பாகுபாடு வெறியையும் தந்தது மனித வக்கிரம்தானே?

மதங்களே தோன்றாத மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கொத்துக்கொத்தாகப் போரில் செத்தார்களே ஏன்?

முதல் உலகப்போர் ஏன் வந்தது? இரண்டாம் உலகப்போர் ஏன் வந்தது? சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டார்களே ஏன்? வெள்ளைக்காரன் இந்தியாவைப் பிடித்தானே ஏன்?

அமெரிக்கா முதன் முதலில் ஜப்பானில் அனுகுண்டை தூக்கி ஏன் போட்டது? அலெக்சாண்டர் ஏன் உலகெங்கும் படையெடுத்து மக்களைக் கொன்று குவித்தான்? ஹிட்லர் ஏன் மக்களையும் கொன்று தானும் மாண்டான்?

மதங்கள் ஏன் தோன்றின? அது மனித வக்கிரத்தை மட்டுப்படுத்தவே தோன்றின. ஆனால் மனித வக்கிரம் மதத்தையே சாய்த்துப் போட்டுவிட்டது. ஆனாலும் வலுவான மார்க்கம் எழுந்து நிற்கும். அறத்திற்கு என்றும் அழிவில்லை. அது அமுக்கப்பட்டாலும் காற்றுள்ள பந்தினைப்போல் நீரின் மேலே வந்தே தீரும்.

அடுத்து சட்டம் ஒழுங்கு மனித வக்கிரத்தை அடக்க முயல்கிறது. ஆனால் வெற்றி பெற்றதா? வெற்றிபெற்றிருந்தால் உலகம் அமைதியாகி இருக்குமே!

உலக அழிவிற்கு மதங்கள்தான் காரணம் என்றால் அமெரிக்கா, இந்தியா என்று எந்த நாட்டிலாவது எந்த மதமும் கூடாது என்று சட்டம் போட்டார்களா? உலகில் எந்த மதமும் கூடாது என்று நாடுகள் பலவும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதா?

புத்தர் ஏசு காந்தி போன்றோரின் வழிகள் வேறாக இருக்கலாம் ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான்.

மதங்கள் வேறாக இருக்கலாம் அவற்றின் நோக்கம் ஒன்றுதான். கடவுள் பயம்காட்டி மனிதனை நேர்வழிப்படுத்துவது. சொர்க்கம் நரகம் என்று கூறி மனித வக்கிரத்தைக் கொல்ல முயல்வது. ஆனால் மனித வக்கிரமோ அந்த மதத்தையே கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களைக் கொன்று குவிக்கிறது.

மனிதர்களின் வக்கிரத்தை அழிப்பதற்குப் பதிலாய் சிலர் மனிதர்களையே அழித்துவிடலாம் என்பதுபோல் பேசுகிறார்கள். குடும்பத்தில் உள்ள வக்கிர மனங்களை மாற்றுவதற்குப் பதில், குடும்பத்தையே அழித்துவிடலாம் என்று யோசனை கூறுகின்றனர். மதங்களில் உள்ள வக்கிர மனிதர்களைத் திருத்துவதற்குப் பதில் மதங்களையே அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் மனைவி பாடு திண்டாட்டம். பெண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் கணவன்பாடு திண்டாட்டம். ஆகவே திருமணங்களையே அழித்துவிடுவதா? இப்படியே வேர் பார்த்து வேரறுக்க முயலாமல், மரம் பார்த்து கிளைகளையும் இலைகளையும் அழிப்பதா?

மத எதிர்ப்பு என்பது வெறியாகும்போது அது மதவெறியைவிட கொடுமையானதாய் ஆகலாம். ஒருவன் தனக்கு மதம் வேண்டாம் என்று விரும்பினால் அதில் தவறே இல்லை.

மதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மதத்தைக் கட்டிக்கொண்டு அழத் தேவையில்லை. மதச்சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கையைக் காண்போர் அதைக் கட்டித் தழுவிக் கிடக்கத் தேவையில்லை.

ஆனால் மத எதிர்ப்பில் வெறி கொண்டால் ஒருவன் வக்கிரம் கொள்கிறான். பிறகு மதவெறியனுக்கும் அவனுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!

மதப்பற்றுடையவர்கள் மதவெறியர்கள் ஆகமாட்டார்கள். உலகில் பெரும்பாலானவர்கள் மதப்பற்றாளர்கள். அதில் அதிகப்படியாய் ஒரு விழுக்காட்டிற்கும் மிகக் குறைவாகவே வெறியர்கள் இருப்பார்கள். அந்த வெறியர்களிடம் இருக்கும் வக்கிரம்தான் அழிக்கப்படவேண்டிய ஒன்று வேறு எதுவும் அல்ல.
எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின்
இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம்
சொல்பவற்றுள் உப்புமில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

நெஞ்சில் ஏக்கம் ஓங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ

படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும்
ஊற்றுகளும் எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மைதான்
மிளிர்கிறது

குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும்
கோணலாகிச் சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம்
ஐந்தெனக்குக் கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
முடக்கமின்றி
பொய்களற்று வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து
எனக்குள்ளே திணிக்கும்
இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில்
தொட்டதெலாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று
புண்ணாவது பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த
மூளைமரம் வளர்த்துவிட்ட
சிலிர்ப்புசெத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்
அகராதிகளைக் கடந்த சொல்

கடவுளுக்குப்
பொருள்கூறும் அகராதிகள்
மதங்கள்
அகராதிகளைக் கடந்த சொல்
கடவுள்

வாழ்வெனும் தமிழே வாழ்க வாழ்க

சித்தர்கள் மொழியாம்
செந்தமிழே 
அழகு
முத்திரை பதிக்கும்
முத்தமிழே

கணினிக்குள் கமழும்
கணித்தமிழே
எங்கும்
இணையத்தில் இனிக்கும்
இகத்தமிழே

உயர்தனிச்
செம்மொழியே
எங்கள்
உயிரின் திருமொழியே

உன்னில் கரைந்தே
உயர்கின்றேன்
எங்கள்
வாழ்வெனும் தமிழே
வாழ்க வாழ்க

தெய்வம் மனிதன் கண்டு நெகிழ்ந்திடணும்

எல்லைக் கோடுகள் அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால் அழித்திடணும்
உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமைக் கட்டுகள் அறுந்து விழவேண்டும்

அழியும் அகிலம் தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத் தழுவிடணும்
அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு நெகிழ்ந்திடணும்

26 தமிழ் இணையம் 2002

அது ஒரு காலம். நான் தமிழ் உலகம் என்னும் யாகூ மின்னுரையாடல் குழுமத்தில் இருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளேயே இட்டுக்கொண்டிருப்பேன். என்னைத் தன் ஆஸ்தான கவி என்று அறிவிக்கும் அளவிற்கு என் கவிதைகள் அங்கே ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன.

அப்போதுதன் தமிழிணையம் 2002ன் மாநாடு கலிபோர்னியாவில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதன் முக்கியத் தலைவராக மணி மு மணிவண்ணன் இருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்கு அப்போதே இருந்தது.

தமிழ் உலகத்தின் மட்டுறுத்துனர்களுள் ஒருவரான அமெரிக்கா ஆல்பர்ட் என்னைத் தொடர்பு கொண்டு, கவிஞரே தமிழிணையம் மாநாட்டின் நூல் ஒன்று வெளியிடுவார்கள். நீங்கள் ஒரு கவிதை எழுதினால் என்ன என்றார். என் தமிழ்ப் பற்றையும் கவிப்பற்றையும் அவர் நன்கறிவார்.

எனக்கு ஓரளவே தமிழிணையம் பற்றித் தெரியும் என்பதால் முதலில் தயங்கினேன் பின் ஒவ்வொரு பத்தியாக எழுதத் தொடங்கினேன். ஒரு நான்கு பத்திகளை எழுதிக் கொடுத்தேன்.  ஆனால் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவின் ஆசையோ அதைவிட அதிகமாக இருந்தது.

கவிஞரே மிக நன்றாக வந்திருக்கிறது இன்னும் சில பத்திகள் எழுதுங்களேன் என்று ஊக்கப்படுத்தினார். நான் பெரும்பாலும் அந்த வகையில் கவிதைகள் எழுதுவது கிடையாது. உள்ளத்தின் உள்ளே எதுவோ கிடந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் இறங்கித் தொலை என்று காகிதங்களில் அந்த குடைச்சலை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வேன்.

ஆனால் இந்தக் கவிதையை எழுத வெளியிலிருந்து குடைச்சல் ;-) ஆனால் பாராட்டுக்குரிய குடைச்சல் அதற்காக என்றென்னும் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவுக்கு என் நன்றிப்பெருக்கு. அவர் இல்லாவிட்டால் இக்கவிதை இல்லை.

இப்படியும் என்னால் கவிதை செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கவிதையே முதல் சாட்சி. ஆகையால்தான் வாழ்த்துக்கவிதைகள் எழுதத் தயங்குவேன். அது இயற்கையாய் வெளிவராமல் மல்லுக்கட்டி கொண்டு வரவேண்டியது இருக்கும் என்பதால்.

ஆனால் இந்தக் கவிதையைச் செயற்கையே நிரம்பியது என்றும் சொல்ல முடியாது. எனக்கிருந்த தமிழ்மோகம் இயற்கையானது. அது தரும் உணர்வுகள் இயல்பானது. ஆகையால் தமிழிணையம் என்ற வெளித் தூண்டலை தமிழ் என்ற உள்தூண்டலோடு பிணைத்து இக்கவிதையை எழுதி முடித்தேன்.

அந்த மாநாட்டின் விழா மலரிலும் வந்தது பலரின் பாராட்டையும் பெற்றது.  விழாவிற்கும் சென்றிருக்கலாமே என்ற கவலையும் வந்தது.

அந்தக் கவிதையை அத்தோடு விட்டுவிடாமல் என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான அன்புடன் இதயம் என்ற நூலிலும் ஏற்றிக்கொண்டேன்.

இதோ அந்தக் கவிதை....

*

சிலிக்கான் பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம்தொட்டு
மொழித்தேன் கூடுகட்டி
தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன் பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க

ஐந்தாம் கணித்தமிழ் இணையம்
அறிவுப் பிழம்பாய் உதயம்
பைந்தமிழ் மின்தமிழ் பாடுது
புதுப்புது நுட்கலை தேடுது

கந்தகத் தமிழினம் கூடுது
காரியச் செந்தழல் மூளுது
சிந்தனை செயற்திறன் ஆகுது
செந்தமிழ் கணிமுடி சூடுது

தொன்னூற்றேழிலே சிங்கை
துவக்கி வைத்தது இதனை
தொன்னூற்றொன்பதில் சென்னை
தொடர்ந்த ஆண்டிலும் சிங்கை

பின்னர் மலேசிய மண்ணில்
பிறந்தது நான்காம் கூட்டம்
இன்னும் இனியும் வளர்க
இணையம் தமிழாய் நிறைக

தொட்டுத் துவக்கியத் தலைவர்
தொடரும் உறுப்பினர்; நண்பர்
எட்டுத் திசைகள் எங்கிலும்
எழுதும் ஆய்வுக் கரங்கள்

கொட்டிப் பொருள்தரும் வள்ளல்
கூடம் நிறைத்திடும் ஆன்றோர்
ஒட்டு மொத்தமாய் வாழ்க
இணையத் தமிழினைப் போல

வலைக்குள் மொழிகளோ நூறு
வனப்பாய் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


உலகத் தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்

கலையும் தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோழுரம் கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி


’அன்புடன் இதயம்’ நூலிலிருந்து....
ஔவைத் தமிழன்

மாறிப்போன தமிழரின் பண்பினால் நொந்துபோன நண்பர் ஒருவர் என்னிடம் ”கவிஞரே, தமிழர் பண்புகள் என்பன யாவை? ஒன்று இரண்டு என்று அவற்றை வரிசைப்படுத்தி பாடுக.” என்றார். அவரின் அங்கதம் என்னையும் தொற்றிக்கொள்ள, உடனே இப்படி எழுதினேன்.


ஒன்றானவன்
எதிலும் ஒன்றானவன்

ஒன்றுமற்ற பேச்சினிலோ
இருண்டானவன்

முறையற்ற குறைவாயை
மூடானவன்

என்றும்
இனிய சொல்லேதும் சொல்ல
நான்காணான் அவன்

ஆயுளுக்கும் மனம் புழுங்கி
அவிந்தானவன்

அவிந்து
அடுத்தோரைத் தூற்றுவதில்
ஆறான் அவன்

எங்கெதிலும் நிறைகாண
ஏழான் அவன்

எட்டி
உயரத்துப் பண்பெதையும்
எட்டான் அவன்

நரகத்து அவலங்கள்
உண்பதானவன்

மறந்தும்
இதயத்தில் நியாய தர்மம்
பற்றான் அவன்


நண்பரே இப்படியெல்லாம் எழுதிவிடுவேன் என்றுதானே என்னை உசுப்பிவிட்டீர்கள். நான் இப்படியெல்லாம் எழுதமாட்டேனாக்கும், நான் எப்போதும் தமிழர்களைப் பாராட்டி வாழ்த்தவே செய்வேன் :)

அன்புடன் புகாரி
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.





இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்

அன்புடன் புகாரி


#அன்புடன்_இதயம்

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார். 

இது என் நண்பர் ஒருவர் எனக்கு எழுதியது. அவர் பெயர் இங்கே அவசியமில்லை. சொல்லப்போனால் அவர் பெயரையும் அவரையும் இன்றுநான் மறந்தும்விட்டேன். அவர் இதை வாசிக்க நேர்ந்தால், முகப்பெட்டியில் ஓர் அஞ்சலிடலாம் அல்லது இங்கே மறுமொழியாய்த் தரலாம்


முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க: http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari

இதைவிட சுவாரியமான ஒரு தகவல் என்னவென்றால். என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல. புகாரா என்ற ஊரிலிருந்து வந்தவர் என்ற பொருளைக்கொண்டதுதான் புகாரி.

அதைவிட சுவாரசியம் என்பதெல்லாம் தமிழரசன், பூங்குழலி, இறைநேசன், கருணைநேசன், அன்புநேசன், அருள்நேசன், முத்தழகு, பொன்னழகு, பூவழகு என்பதெல்லாம் இஸ்லாமியப் பெயர்கள்தாம். ஆனால் அதை ஏற்பதற்கு பலருக்கு மனம் வராது ஏனெனில், இந்து என்றால் சமஸ்கிருதப் பெயர், கிருத்தவன் என்றால் ஹிப்ரூ, வெள்ளைக்காரன் பெயர், இஸ்லாமியன் என்றால் அரபிமொழிப் பெயர் என்று இவர்களே வகுத்துக்கொண்டார்கள். பெயரைக் கேட்டதுமே மதம் தெரிந்துகொள்ளலாம் இல்லையா? சாதியைத் தெரிந்துகொள்ளலாம் இல்லையா?

ஆனால் மற்றமதங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது, நானறிந்தவரை இஸ்லாமிய மதம் மொழிகடந்தது. அது எந்த மொழியையும் இழிவாகக் காணாதது. ஆகவே அதன் அடிப்படையில் அறநாசன், இறைமறுப்பான் என்பதுபோன்ற பெயர்களாய் இல்லாவிட்டால் எல்லா மொழிப் பெயர்களும் இஸ்லாம் பெயர்கள்தாம்.

ஏனெனில் இஸ்லாமியன் என்பவன் அதை ஏற்றுக்கொண்டு தன் கண்ணிய நடட்த்தை வழி காண்பிப்பவனே அன்றி உடல், உடை போன்ற புற அழகால் காட்டுபவன் அல்ல.

ஆகவே தலைப்பில் புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே என்பது பிழை. அது தாராளமாக இஸ்லாமியப் பெயராய் இருக்கலாம். ஓர் இந்து விரும்பினால் இந்துப் பெயராய் ஆகலாம், ஒரு கிருத்துவர் விரும்பினால் கிருத்துவப் பெயராய் ஆகலாம்.

இந்தியாவிலிருந்து வந்தவர் இந்தியர், பாகிஸ்தானிலிருந்து வந்தவர் பாகிஸ்தானி, குஜராத்திலிருந்து வந்தவர் குஜராத்தி என்பதுபோல புகாரா என்ற உஸ்பெகிஸ்தானின் ஓர் ஊரிலிருந்து வந்தவர் என்பதன் பொருள்தான் புகாரி. இமாம் புகாரியின் பெயர் முகம்மது. அவரின் குடும்பப்பெயர்தான் புகாரி. இரண்டையும் சேர்த்து முகம்மது புகாரி என்பது அவர் பெயர் ஆனது.

என் தந்தையை அசன்பாவா ராவுத்தர் என்று அழைப்பார்கள். ராவுத்தர் என்பது குடும்பப்பெயர். இஸ்லாமியப் பெயர் அல்ல. இப்போது யாரும் அந்த ராவுத்தர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதில்லை. அது அவர் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒருவகையில் அது முஸ்லிம்களுக்கிடையில் சாதியை உருவாக்குவதுபோல் இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. அப்படிக்குறைவதையே நானும் விரும்புகிறேன்.

சென்னையிலும் இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் Bukhari என்பதை Buhari என்று எழுதும் வழக்கம் உள்ளது. இது அவர்கள் துவக்கத்தில் செய்த தவறு என்றாலும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. எப்படியோ வைத்து அழைக்கப்படுவதுதான் பெயர். அந்த வகையில் என் பெயர் Buhari தான். வேறு எப்படி அழைத்தாலும் என் செவிகள் ஏற்பதில்லை. என் நண்பர்கள் அனைவரும் என் பெயரை Buhari என்று உச்சரிக்க மிகவும் விரும்புவார்கள். அதனுள் ஓர் இசை ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். சொல்லச் சொல்ல இனிக்குதடா புகாரி என்று சொன்ன நண்பரும் உண்டு.

ஆகவே, Buhari என்பதை புஹாரி என்று எழுதினால்தான் சரி என்று நினைத்து புஹாரி என்றே எழுதிவந்தேன். அப்போது என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளிலும் ஏ. புஹாரி என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பின் தமிழை மேலும் கற்றபின், தமிழில் எழுதப்படாத எழுத்துக்களின் அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்பின் என் பெயரை நான் புகாரி என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.

முகம் அகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் க என்ற எழுத்து எந்த உச்சரிப்பைக் கொடுக்கிறது. முஹம் அஹம் என்றுதானே?

காகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் எழுத்து கா வாகவும் இரண்டாம் எழுத்து ஹ வாகவும் ஒலிப்பதைக் காணமுடிகிறதல்லவா?

கா முதல் எழுத்தாய் வரும்போது கா என்றும் அதுவே இடை எழுத்தாய் வரும்போது ஹா என்றும் ஒலிக்கப்படும். இதுதான் தமிழில் எழுதப்படாத எழுத்துக்கள். இப்படி எழுதப்படாத எழுத்துக்கள் தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

காகம் என்பதை காக்கா என்று எழுதினால் இதில் ஹா என்ற உச்சரிப்பு வரவே வராது. ஏனெனில் ஒரு ஒற்றுக்குப்பின் வரும் க ஒலிப்பில் மாறிவராது என்பதுதான் காரணம். ஒற்றுக்கு அத்தனை அழுத்தம் உண்டு.

ஹரி என்ற பெயரை கரி என்று எழுதமுடியுமா? முடியாது ஏனெனில் அதில் க முதல் எழுத்தாய் வருகிறது. அப்படி வரும்போது அதை ஹரி என்று உச்சரிக்க இயலாது கரி என்றுதான் உச்சரிக்க முடியும். எனவே சில தமிழ்ப்பிரியர்கள் அரி என்று எழுதுவார்கள். என் தந்தையின் பெயரான ஹசன்பாவா அப்படித்தான் அசன்பாவா ஆனது.

இப்படியே புகாரி என்று எழுதி உச்சரித்துப்பாருங்கள் அது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்படும். புகாரி என்பது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்பட்டால் நான் தமிழ் எழுத்தைத் தானே பயன்படுத்த வேண்டும்? ஏன் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது எப்படிப் பார்த்தாலும் கடன்வாங்கிய எழுத்துதானே?

எதுவும் முடியும் தமிழ் எப்படியும் வளையும்!

தமிழன்னை எனக்குத் தந்தது சில்லறைச் சலுகைகளையல்ல உயர்வான வாழ்க்கையையும் நிம்மதியையும்.

என் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ் தந்தது. என் அடையாளமும் இருப்பும் தமிழ் தந்தது.

என் பெயரின் உச்சரிப்பில் தமிழ் எனக்குச் சலுகை தந்தது என்றால் எனக்குத் தேவை ஒரு சலுகை அல்ல இரு சலுகைகள். ஒன்று ’ஹா’ என்ற உச்சரிப்பு. அடுத்தது ’Bu’ என்ற உச்சரிப்பு.

‘ஹா’ என்ற உச்சரிப்பை எழுத்தப்படாத ஆனால் ஒலிக்கப்படும் எழுத்தில் தமிழ் வைத்திருந்தது. அதை அடையாளம் கண்டதும் உடனே பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த B யின் ஓசை அன்பு என்று வரும்போது வந்துவிடும். ஆனால் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது வர வழியில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு முன்னரே பாரதிகளும் பாலுகளும் கவலைப்பட்டதில்லை.

ஏனெனில் எழுத்தில் இருப்பதை வாசிக்கும்போது கற்றோர் பழகின பயன்பாட்டையே பின்பற்றுவர். அப்படித்தான் பாரதி பாரதிதாசன் என்ற பெயர்களெல்லாம் சரியாக உச்சரிக்கப்படுகின்றன.

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடியவர் பாரதிதாசன். ஆனால் அவர் பெயரை ஏன் தூய தமிழில் வைத்துக்கொள்ளவில்லை என்று அடிக்கடி யோசிப்பேன். தமிழ்மீதுள்ள பற்றைவிட பாரதியின் மீதுள்ள பற்றுதான் மிகுத்திருந்ததா அவருக்கு என்ற ஐயம் தோன்றும்.

பாரதி என்ற சொல்லும் தாசன் என்ற சொல்லும் தமிழ் மூலச் சொற்கள் அல்ல. தமிழனின் பெயர் என்ற அளவில் அது தூய தமிழாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தமிழ்ப் பற்றைக் குறைத்துக்கூற முடியுமா?

அவ்வண்ணமே, பிறமொழிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், கிரந்தம் பயன்படுத்துவதாலும் ஒருவனின் தமிழ்ப்பற்றை இழித்துக்கூறுவது அறிவுடைமையாய் எனக்குப்படவில்லை.

ஆனால் வெறுமனே கிரந்தத்தை வலியப் புகுத்துதலும், பிறமொழிச் சொற்களிலேயே விருப்பம் மிகக் கொண்டுள்ளமையும் தமிழை அழிக்கச் செய்யும் அறியாமைச் செயலாகத்தான் இருக்கமுடியும்.

சேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு, தனி ஆங்கிலமே தேவை என்று ஆங்கிலம் கொடிபிடித்திருந்தால் இன்று ஆங்கிலம் இந்த அளவிற்குப் பரந்து விரிந்து உலக மொழிகளின் முதன்மைக்குப் போட்டிபோட்டுக் கொண்டிருக்க வழியில்லை.

பிறந்த குழந்தை பிறந்ததுபோலவே இருப்பதுதான் சரி. அது வளர்ந்தால் கலப்படமாகிக் குரங்காகிவிடுகிறது என்று எண்ணுவது அறிவுடைமையா?

ஓலைச்சுவடி தொடங்கி கணினி வரை குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் எத்தனை வளர்ச்சியினை அடைந்திருக்கும்?

தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? தொல்காப்பியனுக்குப்பின் இலக்கண இலக்கிய மாற்றங்களே இல்லாதிருப்பதா? என்றால் அது வாழ்தமிழ் இல்லை. வாழ்ந்த தமிழ். தொடர் தமிழ் இல்லை முடிந்த தமிழ்.

தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?

தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாதுபோனால்தான் எனக்குத் துக்கம் வரும். தமிழில் இதெல்லாம் சொல்லமுடியாது அதெல்லாம் செய்யமுடியாது என்று சொல்லும் தமிழனை நான் வெறுக்கிறேன். எதுவும் முடியும், தமிழ் எப்படியும் வளையும் என்று சொல்லுவோரால்தான் தமிழ் வாழும் வளரும்.

நான் ஊசுடன் என்று எழுதுவதைவிட ஹூஸ்டன் என்று எழுதுவதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நான் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை.

புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ்.

இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ்ப் பிடிகளைத் தளர்த்துவதே சிறப்பு என்றே கருதுகிறேன்.

தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதல் தேவை!

வடமொழிச்சொற்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் உள்ள சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன.

இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.

ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்து தமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.

இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.

ஆங்கிலம் தமிழை மட்டும் தாக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் தாக்குகின்றது. இந்தி பேசுவோர் நம்மைவிட மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியே சைனா, ஜப்பான், கொரியா என்று பல நாட்டு மொழிகளும். உலகில் இன்று ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுவோர் மிகக் குறைவு.

இன்றைய நாட்களில் மனித இனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒட்டு இனங்களாய் நிற்கின்றவோ அப்படியே மொழிகளும் நிற்கின்றன. கனடாவின் டொராண்டோ நகரம் வந்தீர்களென்றால், எங்கும் கலப்பு எதிலும் கலப்பு என்பதுபோல், தமிழ்ப்பெண் ஆஃப்கானிஸ்தான் பையனை மணக்கிறாள். சைனாக்காரன் ஜெர்மானியப் பெண்ணை மணக்கிறான். கறுப்பர் வெள்ளையரை. வெள்ளையர் மஞ்சள் இனத்தவரை என்று மனித இனங்கள் பிணைந்து நிற்கின்றன.

இவர்களெல்லாம் அந்த ஊரின் வட்டார மொழியே தம் புழங்குமொழியாய்க் கொள்கின்றனர். அது வேறென்ன ஆங்கிலம்தான்.

இதில் ஒரு தமிழ்ப்பெண் ஜார்ஜ் புஷ் என்ற ஆங்கில இளைஞனை மணந்தபின், சார்சு பூழ்சு என்று அழைத்தால் என்னாகும்? அதைப்போலவே ஒரு வெள்ளைக்காரன் காத்தாயியை மணந்தபின், ’கேட்டாய்’ என்றால் என்னாகும்?

இளையவர்கள் நிறையவே வளைகிறார்கள். எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள். தன்னையும் தன் மொழியையும் நேசிப்பதுபோலவே பிறரையும் பிற மொழிகளையும் நேசிக்கிறார்கள்.

கிலோ மீட்டர், லிட்டர் போன்ற சொற்களை எல்லாம் தமிழாக்கவேண்டும் என்று நினைப்பது தேவையா? அதேபோல கணினி, இணையம், யுனித்தமிழ் போன்ற சொற்களைப் புழங்காமல் இருப்பது சரியா?

தமிழன் வேற்று மொழிப் பெண்ணை மணந்தாலும் தமிழை விடக்கூடாது. அப்பெண்ணின் மொழியை அறிந்துகொண்டு அதையும் பேசவேண்டும். அவளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து அவள் தமிழையும் பேசவேண்டும். இரண்டு மொழிகளும் பிள்ளைகளின் மொழியாக வேண்டும். அதுதான் சிறப்பு. ஒரு மொழி அழியாமல் காக்கும் பண்பாடு. அந்தப் பண்பாட்டை வளர்க்கப் பாடுபடுவோம். அது தமிழின் தேவைமட்டுமல்ல உலக மொழிகளின் தேவை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் எளிய வழிகளில் தமிழை உள்ளிழுத்துக்கொள்ள என்ன வழியென்று கண்டு அதனைச் செம்மையாக வளர்ப்போம்.

’என்னம்மா குஷ்புவை குசுபூங்கிற’ என்று மகள் கேட்டுச் சிரிக்காதவாறு தமிழ் வளர்ப்போம். குஷ்பு என்பதென்ன தமிழ்ச்சொல்லா, வெறும் பெயர்ச் சொல்தானே? அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. இதனால் நற்றமிழ் எப்படி கெடும்?

வேட்டி என்பதை வேஷ்டி என்று கூறினால் நாம் திருத்துவோம். கனவு என்பதை ட்ரீம் என்று எழுதினால் வசைபாடுவோம். அப்படிச் செய்வதுதான் நற்றமிழுக்கு இழுக்கு.

பெயர்ச்சொற்களை அதனதன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.

புகாரி என்று எழுதி Buhari என்று வாசிக்கிறோம். பாரதி என்று எழுதி Bharathi என்று வாசிக்கிறோம். இதனால் தமிழ் அழிந்துவிடுமா?

சாருசு பூழ்சு என்று எழுதி அதை ஜார்ஜ் புஷ் என்று வாசிக்க முடிந்தால் அப்படி எழுதுவதில் ஏதும் குழப்பம் இல்லைதான். ஆனால் அப்படி வாசிக்கமுடியுமா? முடியும் என்றால் அது வெற்று விவாதமாகவே ஆகும்.

உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.

கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது.

அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது.

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

1. குளிர்பானம் கூடவே கூடாது

2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்

3. பகல் தூக்கம் கூடாது

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்

5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்

6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது

7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்

8. வாழைப்பழம் உண்ணக் கூடாது

9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்

10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்

11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்

12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்

13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது

16. புளி சேர்க்கக் கூடாது

17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது

18. நிறைய நீர் அருந்த வேண்டும்

19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

20. மது அருந்தக் கூடாது

21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது

22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது

23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்

24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக்கூடாது

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல் மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகு தமிழ் அமுதத் தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்
*****4 

ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னும்
உலராத ஊக்கமாய்
ஓர் எதிரி