அஞ்சோன் அஞ்சு 

அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியளா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியளா

நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியளா
குலைநடுங்கிச் சாவியளா
சும்மா குலைநடுங்கிச் சாவியளா

பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியளா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியளா
அய்யா பக்கத்துல நிப்பியளா

அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா

சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியளா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க

அஞ்சருவி பாத்தியளா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க

அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க

அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது

அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க

அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க

அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி

(மார்ச் 2002)
சந்தவசந்த கவிதைக் குழுமத்தில் ஆளுக்கு ஓர் எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது ஐந்து. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள், தப்பில்லை!

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

'எண்'னை வைத்து அழகிய ஆக்கம் !

வாழ்த்துகள்...