அடிப்படைவாதிகள்

தானே இயங்கும்
கூர்முனை ஆயுதங்கள்

மூளையைத்
தலைக்கு வெளியே
தண்டமாய் வைத்திருக்கும்
முட்டாள்கள்

மிருகங்களை நெஞ்சக் காடுகளில்
சுதந்திரமாய் அலையவிட்டு
வைத்திருப்பார்கள்

மனிதத்தை
திறந்த வெளிகளில்
இரக்கமின்றி
கொன்று குவிப்பார்கள்

எத்தனை எத்தனையோ
மெல்லிய இதயங்களை
நசுக்கி நசுக்கிச் சட்ணி செய்து
அறிவு ஆவியில் வேகாத
மடைமை இட்டிகளுக்குத்
தொட்டுக்கொண்டு
தின்று முடிப்பார்கள்

அடுத்தவர் வாழ்க்கைக்குள்ளும்
தனிமனித சுதந்திரத்துக்குள்ளும்
வெறிபிடித்தக்
காண்டாமிருகங்களாய்
அலைவார்கள்

முட்டி முட்டி இவர்கள்
எட்டித் தள்ளிய முட்டையோடுகள்
மிகப்பல குஞ்சுகளின் சமாதிகள்

வரட்டுப் பிடிவாதங்களின்
முரட்டுக் கோட்டைகள்

இதயங்களைக் காண
இவர்களுக்கு
விழிகள் கிடையாது

இயற்கையைக் கேட்க
இவர்களுக்குச்
செவிகள் கிடையாது

சுடச் சுட மனித ரத்தத்தை
உறிஞ்சமட்டும்
இவர்களின் நாக்கு நீளும்

கலந்துரையாடல்களின்
கழுத்தை நெறித்துக் கொல்லும்
கொலைகாரர்கள்

மனதை மதிக்கும் மரியாதைக்கும்
இவர்களுக்கும்
சொர்க்க நரக தூரம்

உண்மையைக் கொலைசெய்து
செருப்புக்கடியில் இட்டவர்கள்

தங்களிடமே உண்மை இருக்கிறது
என்று மார்தட்டுவார்கள்

தவறு அவர்களுடையதில்லை
தரவில்லையே இறைவன்
அவர்களுக்கும் மூளையை
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்?

பாவப்பட்ட இந்த
மனோ வியாதிக்காரர்களிடம்
இரக்கப்படவும் முடியாது

இரக்கப்பட்டால்
அந்த நொடியே அவர்களால்
மனிதர்கள் இறக்கப்படுவார்கள்

காலத்துக்கேற்ப
கனியத் தெரியாத இதயமும்
தேவைக்கேற்ப
மலரத் தெரியாத உதடுகளும்
நரகத்துக்கே போம் என்ற
உண்மையைச் சொல்லி 
இக்கவிதையை முடிக்கிறேன்

No comments: