நேர்கொண்ட பார்வை

சிலுசிலு துணியணிந்து
தொப்பலாய் மழையில் நனைந்து
இன்னும் கொஞ்சம்
கந்தக நெருப்பு மூட்டினால்

பாதித்தொடை
சாதிக்காது இனி என்ற
சாதுர்ய வணிகமறிந்து
இன்னும் கொஞ்சம்
விழிவெடிக்க உயர்த்தினால்

பின்னுக்கு வளையும்போது
முன்னுக்கு வரவேண்டும்
இன்னும் கொஞ்சம்
எடுப்பாக எல்லாம் துடிப்பாக

கண்களைச் செருக வேண்டும்
இன்னும் கொஞ்சம்
உணர்ச்சிக் கிளர்ச்சியோடு

இவைபோல் உண்டு இன்னும்
இவற்றால்தான் வெற்றி நிச்சயம்
திரையுலகில் நீயே
முதலிடத்தை முத்தமிடப்போகும்
புத்தம்புதுக் கதாநாயகி

அடப்பாவமே
பெண்களின் நிலை
இதுதானா என்று
அருவருப்பு தாளாமல்
பரிதாபம் கரைமீற

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசி
முன்னேறும் பெண்களின்
கவிதைகளுக்குள் கர்வமாய்
மூச்சுவிடத் தாகம்கொண்டு
பக்கங்களைப் புரட்டினேன்

பெற்ற பிள்ளையிடமோ
பெற்றெடுத்த அன்னையிடமோ
உடன்பிறந்த உதிரத்திடமோ
உற்ற நட்பிடமோ
ஊர்க்கோடி நாலுபேரிடமோ
சொல்லக் கூசும் சொற்கள்

அந்தரங்க உறுப்புகளின்
அருவருப்புப் பெயர்களின்
அடாத அணிவகுப்புகள்
படுக்கைக் கசங்கல்களோடு
விசத் தூண்டில்
வீசும் வார்த்தைகள்

கவலை வந்தென்னைக்
கழற்றி எறிந்தது

இவர்களிடமிருந்து
இதய உணர்வுகளை
பெண்ணின மேன்மைகளை
முன்னேற்ற எண்ணங்களை
அற்புதமாய்ப் பதிவு செய்யும்
பலநூறு பெண் எழுத்தாளர்களை
எப்படிக் காப்பது?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்வி...