04 சியா பிரிவினர்

கேள்வி: சியா பிரிவினர் பற்றியும் அவர்களது இறைவன் ஒருவனே பெரியவன் என்பது பற்றியும்...தங்கள் கருத்து என்ன.
Raphel Canada

சியா பிரிவினர் என்று சொல்லும்போதே சுன்னா பிரிவினர் என்று இன்னொரு பிரிவினர் வந்துவிடுகிறார்கள்.

இதில் யார் சரி யார் தவறு என்பதை ஒரு பக்கமாக ஒதுக்குவோம்.

முதலில் யார் இவர்கள்?

அண்ணல் நபியின் நண்பர்கள் வழி வந்தவர்கள் சுன்னா பிரிவினர் என்றும் நபியின் வம்சா வழியினர் சியா பிரினர் என்றும் சொல்கிறார்கள்.

முகம்மது நபியின் மருமகன் அலியை இறைத்தூதர் என்று கொண்டவர்களே சியா பிரிவினர் என்பது தவறான செய்தி.

எனக்கு இந்த இரண்டு பிரிவினரிடமும் நாட்டம் கிடையாது. ஏனெனில் இவர்கள் இருவருமே அண்ணல் நபியின் வழியினைப் பின்பற்றுபவர்கள் அல்லர்.
ஏனெனில், அண்ணல் நபி அவர்கள் கண்டது சமத்துவ, சகோதரத்துவ ஏற்றத்தாழ்வுகளே இல்லாத ஓர் அற்புத உலகம். ஒன்றே மக்கள் ஒருவனே இறைவன் என்ற அசைக்கமுடியாத கொள்கை. .

ஆனால் அதை அவர் மறைந்த உடனேயே அழித்துப் போட்டார்கள். காரணம் வேறொன்றுமல்ல அரசியல்தான்.

அண்ணல் நபிக்குப் பின் யார் ஆட்சி செய்வது நண்பரா உறவினரா என்ற பெரும் சண்டையில் பிரிந்தவர்களே இந்த இரு பிரிவினரும்.

ஒரு மதமோ, இனமோ, மொழியோ அரசியலாக்கப்படும்போது என்னாகும்? கலகம்தான் வன்முறைதான் நாசம்தான். அதுதவிர வேறென்ன நிகழ்ந்துவிடும்?

இதையா அண்ணல் நபிகள் விரும்பினார்கள் அல்லது இதையா இறைவன் கட்டளை இட்டான் என்று சிந்தித்திப் பார்க்க வேண்டும்.

அரசியல் நுழைந்தவுடனேயே ஆன்மீகம் ஆட்டம் கண்டுவிடுகிறது பின் அழிந்தே போய்விடுகிறது. பிறகெல்லாம் மதத்தின்மீதும் இறைவனின் மீதும் குறைசொல்லிக்கொண்டு ரத்த ஆறுதான் ஓடுகின்றன.

உலகமெல்லாம் இஸ்லாமியர்கள் என்று ஆகிவிட்டால் அப்படியே அன்பும் அமைதியும் கருணையும் நிறைந்ததாக இந்த பூமி மாறிவிடுமா? கலகங்களே நிகழாதா? அதாவது மதக் கலவரங்கள் வருமா வராதா? நிச்சயமாக வரும், இப்போதயதைவிட அதிகமாகவே வரும்.

ஏன் எப்படி என்று விளக்கத் தேவையே இல்லை.

பிரிவு பிரிவாகப் பல்கிப் பெருகுவார்கள் இஸ்லாமியர்கள்.

ஏன் என்றால் அவர்கள் தங்களின் ஒற்றை நூலாக குர்-ஆனைக் கொள்ள மாட்டார்கள். அப்படிக்கொண்டால் அதைக் கொண்டு அரசியல் செய்ய முடியாது, பிரிந்துபோகவே முடியாது. எல்லோரும் சமமானவர்களே என்று ஆகவேண்டும். அதைத்தான் குர்-ஆனும் சொல்கிறது அண்ணல் நபி போதித்தார்.

இந்து மதம் மட்டுமே இருந்த இந்தியாவில் இரு பிரிவினர்களாயினர் சிவா விஷ்ணு என்று கொன்றழித்தார்கள். காரணம் அதிலும் அரசியல்தான். கிருத்தவர்களும் இதையே செய்தார்கள் செய்கிறார்கள். காரணம் அரசியல்தான்.

ஆன்மிகவாதிகளுக்கு அரசியல் வன்மம் எப்படி வருகிறது? இல்லை ஆன்மிக வாதிகளுக்கு அரசியல் வருவதில்லை. அரசியல்வாதிகள்தான் ஆன்மிகத்தை ஆயுதமாய்ப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சியா - சுன்னா பிரிவினர் மட்டுமல்ல வேறு எந்தப் பிரிவினராய் இருந்தாலும் குர்-ஆனையும் அண்ணல்நபியையும் ஏற்றுக்கொண்டால் அதுதான் இஸ்லாம். மற்றதெல்லாம் இஸ்லாத்துக்கும் அண்ணல்நபிக்கும் மாறு செய்வதேயன்றி வேறில்லை.

குர்-ஆனை ஏற்காதவர்கள் பிரிவார்கள். குர்-ஆனை ஏற்பவர்கள் மீண்டும் பிரிவுகளை விட்டொழித்து இஸ்லாமியர் என்ற பெயரில் மீண்டும் இணைவார்கள்.

No comments: