உன்னை மட்டுமா?

வாசல் வந்து நிற்கும்
வரத்தை
ஊத்தைச் செருப்பால்
விலாசுகிறாய்

பின்
வாழ்க்கை
வசமாகவில்லையே
என்று
ஓரம் நின்று
வெகு நேரம்
விசும்புகிறாய்

அறிவோ அன்போ
கருணையோ பாசமோ
காட்சிப் பின்னணியிலில்லா
உன் நாடகத்தில்
தத்தித் தாவுகிறாய்
முட்டி மோதுகிறாய்
உள்ளழித்து  உயிர்மிதித்து
நடனமாடுகிறாய்

தப்புத் தாளங்கள்
எம்மேடை ஏறினாலும்
அது மயான மேடையே என்ற
ஐயமே இல்லா
நீ
உன்னை மட்டுமா
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடத்திவிட்டுப் போகிறாய்...