*****

எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது

வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

என் நிலை மட்டும்
எவருக்கேனும் வந்திருந்தால்
என்றோ அவர்
மண்ணோடு மண்ணாக
மடிந்துபோயிருப்பார் என்று
திட்டவட்டமாகச் சொல்லும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

ஒவ்வொரு கையின்
ரேகைகளைப் போலவே
அத்தனைபேர் வாழ்க்கையுமே
வித்தியாசமானவைதானா

வலி என்பது
போதை தரும் சக்தியா

உள்ளுக்குள் வெகுநாட்களாய்
ஊறி ஊறிப் புளித்துப்போய்
நுரைத்துக்கொண்டு நிற்கும்
உணர்வுகளும் நினைவுகளும்தான்
வலியா வேதனையா

மதுவில் மூழ்கியவன் உளறுவதைப்போல
வலியில் மூழ்கியவனும்
தான் என்ன சொல்கிறோம்
எப்படிச் சொல்கிறோம்
என்பதையே அறியாதவனாய்ப்
பினாத்துகிறானே

ஆனாலும்
ஒருவனின் துக்கத்தைப்
போதை என்று சொல்லும்போது
உள்ளுக்குள் திரள்திரளாய்
துக்கம் பற்றிக்கொண்டு வருகிறது

துக்கத்தைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்

துக்கம்
நம் உடன் பிறந்தவையல்ல

காலில் குத்திய முள்ளைக்
கையில் எடுத்துத்
தலையுல் குத்திக்கொள்வதுதான்
வலியும் துயரமும் துக்கமும்

உங்கள் கதைகளை எல்லாம்
மூட்டைகட்டிக்
குப்பையில் எறியுங்கள்

எறிந்த குப்பையை
மறக்காமல்
தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் நடங்கள்

பிறகும் எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கும்

ஆனால் அது
பொதுவான சுகமான
ஒரே கதையாக இருக்கும்
வெற்றிக்
கதையாக இருக்கும்

அன்புடன் புகாரி
20161105

No comments: