இந்நொடி உனைக்காண
ஏதோவொன்று
உள்ளிருந்து
துடியாய்த்துடிக்கிறது

கொஞ்சும் தமிழோடும்
குழையும் இதழோடும்
என் உயிரே


காலங்கள்
தன் திருப்பங்களோடு
தொடர்ந்து
பயணித்துக்கொண்டேதான்
இருக்கிறது

நிகழாத நிகழ்வெல்லாம்
நிகழ்த்திக் கொண்டேதான்
இருக்கிறது

ஆனாலும்
யாதொரு மாற்றமும் இல்லை
கண்ணுக்குள் உயிராக
உயிருக்குள் கண்ணாக
நீ

தித்திக்கத் தித்திக்கச்
செவிக்குள் கரும்பாய்
என் இனிய பாவாய்

உன்
கண்களும் காந்தமும்
தமிழும் தகிப்பும்
ஆழமாக பதிந்த
சொர்க்கத்தின் சொர்க்கங்கள்

வந்தால் தருவேன்
நயாகராவாக
வந்ததும்
சட்டென்று கேட்டுவிடாதே
கேட்கும் முன் கொடுக்காவிட்டால்
உனக்கான என் உணர்வுகள்
வெறும் சொத்தைகள்

களவாடப்பட்ட கனவா
நீ
ஆனால்
கனவு எப்படி களவுபோகும்

களவுபோக வழியற்ற
என் கனவே

உயிரும் உயிரும் உயிர்க்கும்
நம் கனவுகளின் திருவிழா
எப்படியும் பூக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: