அரசியல்வாதிகள் செத்து
என்றோ
பெருவணிகர்களாய்ப்
பிறந்துவிட்டார்கள்

இனியும் ஏன் இவர்களை
அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்
என்று நாம்
தப்பும் தவறுமாய்ச்
சொல்லித் திரியவேண்டும்

முதலே இடாமல்
முதல் எடுக்க
எத்தனைப் பாடுபட்டு
ராப்பகலாய் உழைக்கிறார்கள்

அவர்களது
விளம்பரயுத்திகளின் தரம்
வேறு யாருக்கேனும் வருமா

அவர்களது
கூட்டுச் செயல்பாட்டுப் பணிதான்
எத்தனை அபாரம்

அவர்களது
நிறுவன வளர்ச்சியும்
பெருலாப நோக்குப் பார்வைகளும்
எத்தனை வலிமையானவை

எதைக் கொடுத்தாலும்
விற்றுத் தீர்க்கிறார்களே

நேர்மை
பண்பு
நாட்டின் வளர்ச்சி
மக்கள் முன்னேற்றம்
என்று
எதை வேண்டுமானாலும்
கொடுத்துப் பாருங்கள்

ஓட்டு என்ற
வணிக உரிமம் பெற
ஒற்றைக் காலில் நிற்பார்கள்

ஒழுக்கத்தை ஏலம்விடுவார்கள்
உண்மையை விற்பார்கள்

எந்த விலை தந்தும்
ஓட்டுகளைப் பெற்றுத்தான் 
ஓய்வார்கள்

இனியும்
இந்த வணிகமணிகளை
அரசியல்வாதிகள்
என்று
பிழையாக அழைத்து
அவர்களின் பிழைப்பைக்
கொச்சைப் படுத்தாதீர்கள்

பெரு வணிகர்கள் என்றழைத்தே
கௌரவப்படுத்துங்கள்


- அன்புடன் புகாரி

No comments: