உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm



No comments: