நீ கதாநாயகன்
ஆக வேண்டுமா

அது
மிகவும் சுலபம்

ஒரு
நல்லவனைத் தேடிப்பிடி
அவன்
வில்லன் வில்லன் என்று
பொய்கள் புனைந்துகொண்டே
இரு

கட்டுக்கதைகளால்
அவனைச் சுற்றிச் சுற்றி
இறுக்கிக் கட்டு

முதலில்
மக்கள்
நம்பமாட்டார்கள்தாம்

ஆனால்
பொய்
மகா சக்தி வாய்ந்தது

உண்மை
ஆமையென்றால்
பொய் காட்டு முயல்

கட்டுக்கதைகள்
வெகு
கவர்ச்சியானவை

உண்மைகள்
வேர்களைப் போல் என்றால்
கட்டுக்கதைகள்
வண்ண வண்ண மலர்கள்

பிறகென்ன
ஒரு நாள்
மெல்ல மெல்ல
நல்லவன்
வில்லனாகத்
தெரியத் தொடங்குவான்

அதுதான்
சமயம் என்று
நல்லவனின் உணர்வுகளை
உசுப்பேற்றிவிடு

அவன்
கொதித்துக் குமுறுவான்

மக்கள்
கற்களைக்
கைகளில் எடுத்துவிடுவார்கள்

வழியற்ற நல்லவன்
அழுவான் புலம்புவான்
ஆனால்
கேட்க ஒருவரும்
இருக்க மாட்டார்கள்

வெறுத்து
காட்டுக் கத்து கத்துவான்

பின் வழியற்று
விலகி விலகி ஓடி ஒளிவான்

ஆனாலும்
மக்கள் நல்லவர்கள்
விரட்டி விரட்டி
அடிப்பார்கள்

தர்ம அடி
கொடுப்பதென்றால்
மக்களுக்குக்
கொள்ளைப் பிரியம்

சொந்த
கோப தாபங்களை எல்லாம்
கூட்டி வைத்து
வேக வேகமாய்க்
கல்லெறிந்து
ஆத்திரங்களைத்
தீர்த்துக்கொள்வார்கள்

ஆக
வெற்றிகரமாய்
கற்கள் வீசுவதற்கு
வில்லன்
கிடைத்துவிட்டான்

பிறகென்ன
இனி
நீதானே கதாநாயகன்

சாத்தான்
இருந்தால்தான் இறைவன்
இருக்க முடியும் என்ற
கேடுகெட்ட எண்ணமுள்ள
இந்த உலகை
விருப்பம்போல் வளைப்பது
சாத்தானாகிய உனக்குச்
சுலபமோ சுலபம்

- அன்புடன் புகாரி

No comments: