>>>-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித்
தெரியவில்லை

வணக்கமென்பது
பணிவோடுகூடிய
பாசத்துடன்கூடிய
உடன்பாடு

இது
மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை

-பத்மனாபன் சிவதானுபிள்ளை

<<<-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர் கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக் கத்தத் தொடங்கினார்

அவர் முகத்தில் சினம் கூத்தாடியது

அடிப்பதற்கு எந்த நேரமும்
கையை ஓங்கிவிடுவார் என்று தோன்றியது

அல்லது கையில் இருக்கும்
கெட்டுப்போன தொலைபேசியை
எங்கள்மீது விட்டு எறிந்துவிடுவார்
என்று தோன்றியது

இதை
எப்படிச் சமாளிக்கப் போகிறோம்
என்ற கவலை பயமாய் மாறி
படுத்தி எடுத்தது

அப்போது அப்துல்லா கத்தானி என்கிற
எங்கள் மேலாளர் வந்தார்

அந்தக் கடுங் கோபக்கார்
வாய்க்கு வந்தபடி கத்தக் கத்த

அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்...

என்று
நிதானமான.... தெளிவான.... குரலில்
ஒரு நூறுமுறைக்குமேல்
மேலாளர் அப்துல்லா கத்தானி
சொல்லிக்கொண்டே இருந்தார்

வேறு எந்த பதிலும் சொல்லவும் இல்லை
பதிலுக்குக் கோபமாகத் திருப்பிக் கத்தவும் இல்லை

வந்தவரின் கோபம் படிப்படியாகத் தணிந்தது

அலைக்கும் அஸ்ஸலாம் என்று
வந்தவர் முதன்முறையாகச் சொன்னார்

அடுத்த நொடி இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்
கட்டியணைத்துக் கொண்டார்கள்

வந்தவரின் கோபத்திற்கு எதுகாரணமோ
அதைச் சரிசெய்து
இணக்கமாக அனுப்பி வைத்தார் அப்துல்லா கத்தானி

நான் அப்துல்லா கத்தானியிடம் கற்றுக்கொண்டது ஏராளம்

அதில் முக்கியமான ஒன்று இதுதான்

அன்புடன் புகாரி

No comments: