கருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும் முதல் கவிதையை வடிக்க தயங்குவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

கவிதை முதலில் அந்தரங்கமானது. அதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே முதல் கவிதை எழுத தயங்குவோன் என்று நான் யாரையுமே சொல்ல மாட்டேன். ஆனால் எழுதித தன் கவிதையை வெளியில் காட்டத் தயங்குபவன் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

ஏன் எழுதியதைக் காட்டத் தயங்குகிறான் அந்த இளம் கவிஞன். காட்டமாக நிற்கிறார்களே சில விமரிசகர்கள், அவர்கள் காரணமாக இருக்கலாம்.

எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும்.

எழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது.

வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன் மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்.

கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் மனம் சிதைந்துபோவான்.

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதைகளாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

பாரதி எழுதிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. ஆனால் முதல் பறிசு பெற்ற கவிதை எதுவென்று யாருக்கும் தெரியவில்லை.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

நான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.

கவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.

சிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.

கவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.

அன்புடன் புகாரி

No comments: