காலுக்குக் கால்
கங்காருகளாய்த் தாவித்தாவி
கவிழ்ந்துவிழும்
மானமிலா ஈனத் தலைகள்

முதுகெலும்பை ஒடித்து ஒடித்து
கள்ளக் காசுக்கு
வெட்கமின்றிக் கும்பிடுபோடும்
தலையில்லாக் களைகள்
தமிழ்நாட்டின் பிழைகள்

எழவே முடியாமல்
தமிழனின் மானத்தை
முட்டிபோட்டு முட்டிப்போட்டே
முடித்துப்போடும்
இந்தக் கூத்தை
இன்னும்
எத்தனைக் காலத்தில்தான்
மானத் தமிழன்
மீட்டெடுப்பானோ

மின்னலாய் பாய்ந்து
மீசையோடு வாருங்கள்
சேர சோழ பாண்டியத்
தமிழ்க் காளைக் கன்றுகளே

சவுரிமுடித்த
கவரிமான் கூட்டத்தின்
உயிர்நீக்க வாருங்கள்

மயிர்நீப்பினல்ல
தலையே நீங்கப்பெற்றும்
முண்டங்களாய்
நாற்காலிப் பசையில்
ஒட்டிக்கிடப்பதைத்
துடைத்தெறிய வாருங்கள்

அன்புடன் புகாரி
20171106

No comments: