சில இந்துக்கள் என்னை
இந்து விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில முஸ்லிம்கள் என்னை
முஸ்லிம் விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில நாத்திகர்கள் என்னை
நாத்திக விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

ஆனால்
பெரும்பாலானவர்கள் என்னை
நல்லிணக்கம் தேடும்
வெள்ளைப் புறாவாகத்தான்
பார்க்கிறார்கள்

இவற்றைச் சந்தித்துத்தான்...

ஒவ்வொரு கவிஞனும்
இங்கே வளர்ந்து வந்திருக்கிறான்

ஒவ்வொரு எழுத்தாளனும்
இங்கே காலூன்றி இருக்கிறான்

ஒவ்வொரு கலைஞனும்
இங்கே கலை வளர்த்திருக்கிறான்

ஒவ்வொரு புரட்சியாளனும்
இங்கே புரட்சி செய்திருக்கிறான்

உலகம் புதிதல்ல
நான் தான் உலகுக்குப் புதியவன்

நான்தான் இம்மாதிரி
வெறுப்புணர்வுகளையும் சகித்து
இணக்கம் தேடிப் போராட வேண்டும்

எதிர்ப்பவர்கள்
எண்ணங்களை ஊட்டுகிறார்கள்
அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்

பாராட்டுபவர்கள்
ஊக்கம் தருகிறார்கள்
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஆகவே
எதிர்ப்பும் இணக்கமும்
என் வேர்களுக்கான நீர்தான்
என்று புரிந்துகொள்கிறேன்

போற்றுதலும் தூற்றுதலும் கடந்து
நல்லறம் செய்க
அன்பு நெஞ்சங்களே

அன்புடன் புகாரி
20171130

No comments: