என்னிடம் ஒரு நான்கு கேள்விகள் இருக்கின்றன. அதற்கு சரியான விளக்கம் உங்களிடமிருந்து வேண்டும்:
1. ”நான் உன்னை நினைத்து உருகிக் கரைகிறேன்.” உடம்பு உருகிக் கரையுமா? கரைந்தபின் எப்படி உயிரோடு இருக்க முடியும்?
2. ”உன்னைக் காணாமல் நான் செத்தே போயிட்டேன்” செத்துப் போனவன் எப்படி இப்போது பேசுகிறான். என்றால் அவன் பிசாசா?
3. ”கமலைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல” காலாவது ஓடும். கை எப்படி ஓடும். என்றால் இவன் ஆடா மாடா? கைகள் இல்லாமல் இவனுக்கு இருப்பவை அத்தனையும் கால்களா?
4. ”என் தந்தை இறந்த சொல் கேட்டு தூள் தூளாய் வெடித்துச் சிதறினேன்” ஓர் உடம்பு இப்படித் தூள் தூளாய் வெடித்துச் சித்றுமா? அப்படிச் சிதறியது ரத்தமும் சதையுமாய் வீதியில் கொட்டிக் கிடக்கிறதா? அதன்பின் அவன் உயிரோடு இருந்து நம்மிடம் பேசுகிறானா?
கவிதையைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. பலரது கேள்விகள் என்னைத் திடுக்கிட வைக்கின்றன. நான் அதிர்ந்து வாயடைத்துப் போகிறேன். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்லமுடியும் என்று திணறினேன். பிறகுதான் இப்படி எளிய முறையில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என்று இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். எல்லோரும் பதில் சொல்லலாம். இது எப்படிச் செல்லப் போகிறது என்று காண உண்மையிலேயே ஆவல்.
இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா என்பது ஆதாரக் கேள்வி. நான் உருவம் இல்லை என்கிறேன். இருக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்தின் இலக்கிய நடையைப் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த வழியில் புரியவைக்க முடியுமா என்பதே என் வேர் முயற்சி.
உதாரணம்:
மிக்க வல்லமையும்
கண்ணியமும் உடைய
உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
(குர்-ஆன் : 55:27)
இக் குர்-ஆன் வசனத்தில் இறைவனின் முகமே என்று வருகிறதே. அதனால் இறைவனுக்கு முகம் உண்டு, இறைவனுக்கு உருவம் உண்டு என்கிறார்கள் சிலர். அவர்களுக்குக் கவிதை வாசிப்பைக் கற்றுத் தருவதே இந்த இடுகையின் உண்மையான நோக்கம்.
அன்புடன் புகாரி
20171130

No comments: