தமிழா நீ கனடா வந்துவிட்டாய்
அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று
நூற்றிப் பதினெட்டு நாடுகளில்
பெட்டிக்கடை முதல் கூகுள் உயரதிகார நிர்வாகம் வரை
எல்லாமும் தொட்டுவிட்டாய்

ஆனால் இந்தப் புலம் பெயர் நாட்டில்
படிக்கத்தானே அனுப்பினோம் மகனை
பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டதே
மருந்துக்கும் விருந்தாகி மறைந்தே போனானே
பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நான்கு காதல்விழி வீசி
எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்களே

பெற்ற பிள்ளைகளை
நல்ல பண்பாட்டுக்குள் கட்டிவைப்பதென்பது
நயாகராவை முந்தானையில் ஏந்துவதைப்
போன்றதாகவல்லவா இருக்கிறது

தமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க
மிகுந்த கவர்ச்சிகாட்டியல்லவா
நிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம் என்று கலங்குகிறாய்
ஏன் வந்தோம் இந்த நாட்டுக்கு என்று நொந்து மடிகிறாய்

தமிழா நீ சற்றே அமர்ந்து சிந்தையில் தீபம் ஏற்றிப்பார்
உன் வீட்டில் தமிழிருந்தால்
தமிழ்ப்பிள்ளை தடம்மாறுமா

தமிழ் வெறும் மொழியல்ல
கற்புமிகு பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவுகள் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்

தமிழில் சிந்தித்துத் தமிழாய் வாழும் இளைஞர்கள் எங்கே
இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தானே போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக....
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
தமிழர் மேடைகள் அமைந்திடல் வேண்டாமா

ஐம்பதைக் கடந்தவர்களே
வந்து நொந்து அமர்ந்திருக்கும் முதியோர்க் கூடமாய்
நம் தமிழ் மேடைகள் இருந்தால்
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்
ஒற்றைத் தலைமுறையோடு கருகிச் சிதையாதா
கயானாக் கதை என்ன நாம் அறியாததா

ஒவ்வொரு புலம்பெயர் ஊரிலும் ஒரு தமிழ்ப்பள்ளியேனும்
இலவசமாய் நடத்தப்படுதல் வேண்டும்
அங்கே தமிழர் உணவும் உற்சாகமாய் வழங்கப்படவேண்டும்

இதுவே உன்முன் என் உறுதியான வேண்டுகோள்

அன்புடன் புகாரி
20171202

No comments: